Wednesday 15 January 2014

எப்படியென்று தெரியவில்லை
என்னிடம் வந்து சேர்ந்திருக்கிறது
ஒரு
கள்ள கண்ணீர்த்துளி..

வழக்கமாக 
இவை போன்றவற்றில்
யாரேனும் 
அடையாளமிட்டு அனுப்பியிருப்பார்கள்..

அல்லது

குறைந்தபட்சம்
சிறு எழுத்தில்
இவை போலி என்றேனும்
எழுதியனுப்பியிருப்பார்கள்..

இவையேதுமில்லையெனினும்
தொடும்போது
கைத்தோ
சிலிர்த்தோ
உறுமியோ
அவற்றின்
கள்ளத்தனத்தை அறிவிக்கும்
அவைகள்..

எந்த சமிக்ஞைகளுமில்லாமல்
ஒரு முத்தத்தின்
நேர்மையைப் போல
அல்லது
ஒரு
ஒப்பாரியின் கதகதப்பைப் போல

நிஜம் போலே நிற்கிறது
இந்த
இல்லாத கண்ணீர்த்துளி..

நோயைப் போல நான்
சுமந்து திரியும்
இந்த
கண்ணீர்த்துளியை
யாரிடம் நான் சுமத்த..?

ஹெர்க்குலிஸ்களின்
வேதனை
சிறு 
கண்ணீர்த்துளிகளுக்குள்
சிறைப்பட்டிருக்கிறது..

No comments:

Post a Comment