Thursday 30 January 2014

இல்லை என்று சொல்கிறேன்..

இருந்தால் என்ன செய்வாய்
என்கிறாய் நீ..

எனக்கென்ன வேண்டும்..
கிடைக்க வேண்டியது கிடைத்தபடிதான்
இருக்கிறது..

முடிந்தால் உன் கடவுள்
நான்
சனிக்கிழமை இரவுகளில்
செய்த போன்கால்களை
மறுநாள் எனக்கு 
நினைவில்லாத மாதிரி
எல்லாருக்கும் நினைவில்
இல்லாமல் செய்யட்டும்..

அல்லது

அக்குழந்தைகளின் 
பருத்த வயிற்றில்
பசி எனும் கொடுநோய்
இல்லாமல்
சொஸ்தப் படுத்தட்டும்..

சொற்களை
பலம் கொண்டவையாக 
மாற்றட்டும்..

இழந்து போனவற்றை
இழந்த சுவடின்றி
திருபபித் தரட்டும்..

அதிகம் வேண்டாம்..
நான் சிந்திய
ஆயிரம் கண்ணீர்த் துளிகளில்
ஒன்றையேனும்
மறுபடி என் கண்ணுக்குள்
புக வைக்கட்டும்..

உன் மற்றும்
உன் கடவுளின்
பெருமைமிகுந்த
பார்வையால்
என் போன்ற
எளியவர்களின் வாழ்வு
குறைந்தபட்சம்
துயரில்லாததாகட்டும்..

அளவிலா செல்வம்
துயரிலா வாழ்வு
என்று எதுவும்
கோராத எனக்கு
பசியிலா வயிற்றை
அருளினால் கூட போதும்..

எல்லா கடவுள்களின்
கன்னத்தைக் கிள்ளியெடுத்து
முத்தமிடுவது மட்டுமன்றி
அவர்களின் கால்களுக்கு 
நான் செய்த செருப்புகளை
அணிவிப்பேன்..

அவர்களின் வரங்களைப்
போலன்றி
என் செருப்புகள்
மிகவும் சௌகர்யமானவை..

No comments:

Post a Comment