Thursday 14 November 2013

வீச்சென்ற ஒரு கதறலில்
உங்கள்
பதற்றத்தைப் பெறும்
தெருநாய்க் குட்டி
முறிந்த காலின்
வலியையும் மீறி
பரிவுடன் தூக்கும்
உங்கள் புறங்கையை
தன் மென் நாக்கால்
நக்குகிறது..

என்றென்றும்
புன்னகைக்காத நீங்கள்
உணவு நன்றாக இருப்பதாக
சொன்ன ஒரு சொல்லுக்கு
பல மாதங்கள் கழித்து
புன்னகைக்கிறார்
உங்கள் மனைவி..

தேவைக்கு அதிகமென
நினைத்து நீங்கள்
கொடுத்த டிப்சுக்காக
நீங்கள் திருப்திப்படும் அளவுக்கு
வளைந்து வணக்கம் வைக்கிறார்
மதுச்சாலை சேவகர்..

அவரவர் கடமைக்காக
ஊதியம் தாண்டி
பரிசில்கள் அளித்த மகாராஜா
நிம்மதியாக உறங்கப் போகிறார்..

அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்
அன்பே சிவம்..

No comments:

Post a Comment