Thursday 14 November 2013

முகநூல் நண்பர் Selva Kumar ஒரு முறை பதிவிட்டிருந்தார் : சைக்கிளில் வந்தவன் அவன். பரபரப்பான சாலை அது. (சேத்துப்பட்டு அருகில்) நடுச்சாலையில் அவனால் சைக்கிளை அதற்கு மேல் ஓட்ட முடியவில்லை. தள்ளாடுகிறான். வண்டியின் கேரியரில் இருந்த குழந்தைகள் இரண்டும் அலறி அழுதபடி இருந்தன. அவன் சாலையை கடப்பது இருக்கட்டும். அவன் வீடு எங்கேயோ.. அங்கே அவன் போய் சேர்ந்தானா..? அந்தக் குழந்தைகள் உயிரோடு வீடு சேர்ந்தனவா..? குறைந்தபட்சம் அவன் அந்தச் சாலையைக் கடந்தானா என்பதான கேள்விகள் என்னைச் சுட்டுப் போட்டன..

மது.. இது நிச்சயம் விஷமல்ல.. கிருமி.. தொற்றிக் கொண்டபின் என்ன மருந்து எடுத்தாலும் உங்களை விடாத கிருமிதான் அது..

நான் திரைத்துறையில் இருக்கிறேன். எனக்கும் ஆதர்சம் என்று இயக்குனர்கள் உண்டு. தமிழிலேயே உலகத் தரத்தில் படம் எடுத்த ஒரே இயக்குநரை ஒரு டாஸ்மாக் பாரில் சட்டை அவிழ்ந்து தொங்க பார்த்து நான் பட்ட வேதனையை எப்படி சொல்வதென்று தெரியவில்லை.. இன்னொருவன்.. இயக்குனன்.. தமிழின் ஆகச்சிறந்த பொழுதுபோக்குப் படங்களிலொன்றை இயக்கியவன். அவன் காதலித்தது ஆயிரக்கணக்கான பெண்களை.. ஆனாலும் அவனைக் காதலித்த மூன்று பெண்களை மணந்து கொண்டவன்.. உங்களில் நம்பவே முடியாத அளவுக்கு வெற்றிகரமான இயக்குநரொருவருக்கு அவரது வெற்றிப் படங்களின் விவாதத்தில் கலந்து கொண்டு படத்தின் வெற்றியில் பங்கு வகித்தவன். நீங்கள் பார்த்து வியந்த அவரது இரண்டு படங்களுக்கு வசனமும் கூட அவனே.. குடியினால் சீரழிந்து தெருவில் கிடந்தான். எப்போது புத்தி வந்தது என தெரியவில்லை.. திடுமென திருந்தி இப்போது ஒரு படத்தை இயக்கி இருக்கிறான். படத்தின் வெற்றி தோல்வி பற்றி எனக்கு கவலை இல்லை. அவன் குடியை நிறுத்தி ஒரு படத்தை இயக்கியதே பெரிய வெற்றிதான் என்பது என் எண்ணம்..

முன்பெல்லாம் அடுத்த தெருவில்.. அடுத்த குடும்பத்தில் ஒருவர்தான் குடிகாரராக இருந்தார்கள். அந்த குடிகாரர்கள் பற்றி நாம் வதந்திகளாகத்தான் பேசிக் கொண்டிருந்தோம்.. இப்போதோ தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குடிகாரர்கள் இருக்கிறார்கள். இப்போது அவர்களைப் பற்றிப் பேசாமலிருக்கவே நாம் முயல்கிறோம்..

பதின் வயதுப் பையன்கள் பார்களில் உட்கார்நதபடி அவர்களின் தந்தையார் வயதையொத்த பணியாளர்களிடம் விருப்ப மதுவை வாங்கிவர ஆர்டர் கொடுப்பது இயல்பானதொரு அன்றாட நிகழ்வாகிவிட்டது..

குடியினால் நடக்கும் கொலைகளும்.. குடிப்பதற்காக நடைபெறும் கொள்ளைகளும் நாம் படித்துக கடந்து போகும் தினசரி செய்திகளாகிவிட்டன..

குடி நம் ஒவ்வொருவரது குடும்பத்துககுள்ளும் புகுந்து குடிகெடுக்கும் முதல் காரணியாகிவிட்டது.. எனக்குத் தெரிந்து பெரிய போதை காதலும் காமமும்தான்.. அந்த இரண்டையுமே புறந்தள்ளிவிட்டு மூளையை மரத்துப போக வைத்திருக்கிறது குடி..

இதை எதிர்த்து இன்று நாம் போராடத் துவங்கவில்லை எனில் என்று போராடினாலும் பயன் இல்லை என்றே எண்ணுகிறேன்.. நாம் குடிப்பவரோ இல்லை குடிகாரர்களால் பாதிக்கப் பட்டவரோ.. எதிர்கால சமூகம் குடித்து அழிய கூடாது என்ற சமுதாய நோக்கு கொண்டவரெனின் இன்னமும் சந்தோஷம்.. குடிக்கு எதிராக நாம் போராட வேண்டிய நேரம் வந்துவிட்டது நண்பர்களே.. இன்று போராடவில்லை என்றால் நாளை நம் பிள்ளைகளை யாராலும் காப்பாற்ற முடியாது. வாருங்கள்..

No comments:

Post a Comment