Thursday 14 November 2013

ஒரு நாள் எப்படி வேண்டுமானாலும் இருக்கக் கூடும்.. ஆனால் மனம் ஒன்றுதான்.

நண்பர்களை தொந்தரவு செய்ய மனது இடம் கொடுக்கவில்லை. வெகு தொலைவு என்றால் மட்டும் எனது அசோசியேட் டைரக்டரான செல்வேந்திரனை வண்டியெடுத்து வரச் சொல்லிப் போகிறேன். இற்றை நிலையில் அவன் மட்டும்தான் available. பின்னால் உட்கார்ந்து போகையில் மரண பீதியை உண்டு பண்ணுகிறான். இருக்கும் இன்னொரு கையையாவது காப்பாற்றலாம் என்ற எண்ணத்தில் மிக மிக தேவை என்றால் மட்டுமே அவனை அழைத்துப் போகிறேன்.. மற்ற எல்லா நேரமும் நடைதான்.. வெகு நாட்களுக்குப் பின் தினமும் 7 முதல் 8 கிமீ நடக்கிறேன்..

நடைத்துணை என்று ஒன்று வேண்டுமல்லவா..? அதற்கு இருக்கவே இருக்கிறது நம்ம மொபைல்.. காலையில் இருந்து ஒரே பாடலை கதற்றிக் கொண்டு இருக்கிறது..(ரிப்பீட் போட்டால் கதறாதா என்ன)

மூன்றாம் பிறையில் இருந்து ஜேசுதாஸ் பாடுகிறார்..

கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..

இப்போது ஹெட்ஃபோனில் கேட்கும்போது ஒவ்வொரு முறையும் புதிதாக தெரிகிறது. அவர் பாடும்போது பின்னணியில் மெலிதாக ஒரு டார் ஷெனாய் ஒலிப்பது ஹெட்ஃபோனில் நன்றாகக் கேட்கிறது.. அது பாடலை முக்கியமான இடங்களிலெல்லாம் தொடர்ந்தபடியே இருக்கிறது. அது பாடலில் இருந்து ஒலிக்கவில்லை. பாடலுக்கு வெளியே இருந்து நமது இடதுகாதில ஒலிக்கிறது. அந்த பாடலை நாம் எப்படி பின்னாலேயே தொடர்ந்து முணுமுணுக்கிறோமோ அதே மாதிர் அதுவும் முணுமுணுக்கிறது.. உண்மையில் அது பாடலின் ஒரு பகுதியல்ல. அதுதான் ரசிகனின் குரல்..

உனக்கே உயிரானேன் எந்நாளும்
எனை நீ மறவாதே..

என்கையில் அது எப்போதோ நம் அம்மா சொன்ன வாக்கியம் போலவும் இருக்கிறது.. டார் ஷெனாய் அதை உறுதி செய்கிறது. அம்மாக்களின் குரல்கள் டார் ஷெனாயை ஒத்துதான் இருக்கின்றன..

பாடல் காலத்தைத் தாண்டி முன் செல்கிறது. சில நேரம் அது காலமின்றி இருக்கிறது. சில நேரம் அது பலப்பல காலம் தாண்டி பின்சென்றபடியே இருக்கிறது..

ஏதோவொரு நெகிழ் இரவில் பிச்சி போலும் பிள்ளை போலுமான பேரழகுக் குழந்தைஒருத்தி நம் மடியில் எச்சில் வடியப் படுத்துறங்கும்போது அந்தப் பாடல் ஒலிப்பதாக மனச்சித்திரங்கள் புரண்டு புரண்டு ஜாலம் காட்டுகின்றன எப்போதும்.. ஶ்ரீதேவியோ கமலோ அன்றி அங்கே ஒரு மாயா ரசவாதத்தில் நாமும் நமக்குப் பிடித்த(நாம் ஶ்ரீதேவி போல அழகானவள் என்று பிம்பப்படுத்தி வைத்த) பெண்ணுமாக ஒருவரை ஒருவர் தாலாட்டிக்கிடக்கிறோம்..

ஒரு சரியான பிறழ் நொடியில் அங்கே பாடுலது ஏசுதாசா, கண்ணதாசனா, பாலுமகேந்திராவா, கமலா அல்லது நாமா என்ற விதிர்ப்பு ஏற்படுவது உண்மை..

நம் இறக்கைகளுள் பொத்தி கவர்ந்து சென்ற ஶ்ரீதேவியை காலம் இப்பவும் மெல்ல மெல்லதான் வயதாக்கி வருகிறது. கொஞ்சம்அடையாளம் மாறினாலும் அந்த தேவதை அதே புன்னகையைஇன்னமும் ஒளிர்த்தபடி இருக்கிறாள்.

இதோ என் மொபைலில் அன்றைக்கு நான் டீக்கடை டீக்கடையாகதேடிச்சென்ற நின்ற ரசித்தபாடல காலை முதல் ஒலித்தபடியே இருக்கிறது. அ து யாருடைய பாடலாக வேண்டுமானாலும் இருக்கட்டும். எப்போதும் சில தேவதைகளையும் சில வருடல்களையும் நினைவு படுத்தினால் போதுமில்லையா..?

அந்திப்பகல் உனைநான் பார்க்கிறேன்..
ஆண்டவனே இதைத்தான் கேட்கிறேன்..

ஆரிராரோ.. ஓ ஆரிரோ..

No comments:

Post a Comment