Thursday 14 November 2013

ஒரு சம்பவம்.. நான் வழக்கம் போல வீட்டில் இருந்து எழுதிக் கொண்டு இருந்தேன். மதியம் ஒன்றரை இருக்கும்.. காலிங் பெல் அடிக்க திறந்து பார்த்தேன். இரண்டு பேர் நின்று கொண்டு இருந்தார்கள். உங்க வீட்டு கேஸ் ஸ்டவ்வை க்ளீன் பண்ணித் தருவோம். வெறும் 20 ரூபாய்தான். க்ளீன் பண்ணி முடித்தால் எரிபொருள் மிச்சமாகும் என்றார்கள்.. இது மாதிரி ஃபிராடுகளை நான் முன் கூட்டியே அறிந்திருந்ததால் வேண்டாம் என்று மறுத்துவிட்டு அவர்கள் எங்கள் காம்பௌண்டை விட்டு போகும் வரை காத்திருந்துவிட்டு கதவை மூடினேன். அவர்கள் மாடியில் உள்ள குடித்தனங்களுக்கு எல்லாம் போகாமல் வேகமாக வெளியேறியதன் காரணம் எங்க சின்னா.. அவர்கள் காலிங் பெல் அடித்தததில் இருந்து வெளியேறும் வரை குரைத்துக் கொண்டே இருந்தான்..

மறுநாள் தந்தி பேப்பரில்தான் வந்தது செய்தி: எங்களுக்கு நாலு வீடு தள்ளி இருந்த இயக்குநர் ஒருவரின் வீட்டில் உறவுக்காரப் பெண் மட்டும் தனியாக இருந்தாளாம். இவர்களின் பேச்சை நம்பி உள்ளே அழைத்திருக்கிறாள். அவளை கட்டிப் போட்டுவிட்டு இருவரும் வீட்டில் இருந்த 13 சவரனோ 15 சவரனோ நகையை கொள்ளையடித்துகொண்டு போய்விட்டார்கள்..

என் மனைவி பக்கத்து போர்ஷன் காரர்களிடம் எல்லாம் இவர் இருக்குறப்பதான் நம்ம காம்பௌண்டுக்கு வந்தாங்களாம். நம்ம வீடுகளை எல்லாம் நோட்டம் விட்டாங்களாம் என்று காந்தி வந்து போன இடங்களை ஒரு தேச பக்தன் காட்டுவது போல அவர்கள் நின்ற இடம் நடந்த இடத்தை எல்லாம் அனைவருக்கும் காட்டிக் கொண்டு இருந்தாள்..

சாயந்திரமாக மேல் வீட்டு பையன் வந்தான். அப்போது அவன் கல்லூரி ஃபைனல் இயர் படித்துககொண்டு இருந்தான். என்ன அங்கிள்.. நேத்து திருடங்க வந்தாங்களா என்ன.. என்று கேட்டான். நான் பெருமையாக தந்தி பேப்பரில் செய்தி வந்திருந்த பக்க்த்தை அவனிடம் காட்டி நீயே நியூசை படித்துப் பாரு என்றேன். பேப்பரை திருப்பிக் கொடுத்து எந்த குற்றவுணர்வும் இல்லாமல் எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது அங்கிள். நான் செக்கண்ட் லாங்குவேஜா ஃபிரெஞ்சுதான் படிச்சேன்.. என்றான்.எனக்கு அந்த திருடர்கள் மேல் கோபமே வரவில்லை..

No comments:

Post a Comment