Thursday 14 November 2013

அதிகபட்சம் எங்கள் ஊரில் இருந்து 40 கிலோமீட்டர்தான் இருக்கும்.. மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள், படு மோசமான சாலை, எந்நேரமும் உதடுகளில் புன்னகை சுமந்திருக்கும் மனிதர்கள் (பெரும்பாலும் தேயிலைத் தோட்டக் கூலித் தொழிலாளர்கள்).. நகரத்தின் கசகசப்பில் இருந்து விலகி சொர்க்கத்துக்கு போன மாதிரி இருக்கும் மேகமலை.. (சொர்க்கத்துக்குப் போகும் வழி எப்போதுமே கரடுமுரடாகத்தான் இருக்கும் போல) குளிர் உறையும் தனிமைக்கு எங்களுக்கெல்லாம் புகலிடம் அதுதான். எந்நேரமும் மேகம் வந்து தொட்டுவிட்டுப் போகும்.. சிந்நாட்களில் கடைசி பஸ்சை விட்டுவிட்டு பஸ்ஸ்டாப்பின் தனிமையில் இரவின் மொழியைக் கேட்டபடி, மேலே தெரியும் நிலவின் புன்னகைச் சத்தத்தையும் கேட்டபடி இரவில் கரைந்து போய் அங்கு நின்றிருக்கிறேன்.. இரவின் மணத்தைக் கூட அங்குதான் நீங்கள் உணர முடியும்.. பெருவலி கொண்ட ஒரு துக்கநாளில் அங்கு செல்ல வேண்டி வந்தபோது என் மனத்தின் ரணத்தை ஆற்றியது அந்தப் பிரதேசத்தின் மௌனந்தான் என்பதை ஒரு நாளும் வார்த்தைகளால் என்னால் விளக்கவே முடியாது.. தடுக்கி விழுந்தால் மேகமலை, வெண்ணியாறு, இரவங்கலார் என்று நினைத்தபோது சொர்க்கத்துக்கு சென்று வந்த நாட்கள் அவை.. இப்போது அனைத்திலிருந்தும் வெகுதூரத்தில், தகிக்கும் சென்னையின் கோடையில் எலும்பும் உருகும் வெம்மையில் அனலைப் பொழியும் ஃபேனின் கீழ் உட்கார்ந்து முகநூல் பார்க்கும்போது சட்டென Gnanasekar Vijayan என்ற முகமறியா முகநூல் தோழமை பதிவிட்டிருந்த மேகமலையின் படத்தைப் பார்த்ததும் வெகுநாள் பார்க்காத ஒரு நண்பனை எதிர்பாராமல் சந்தித்தது போல இருந்தது.. குறைந்தபட்சம் நினைவுகளின் ஊடாகவேனும் குளிர் மலைக்குள் பயணித்து வந்தேன்.. வேறென்ன சொல்ல முடியும்.. நன்றிதான்..

No comments:

Post a Comment