Thursday 14 November 2013

நண்பன் ஃப்ராங்க் Franklin Kumar) எடுத்த பார்வையற்றோரின் இசைக்குழு புகைப்படத்தைப் பார்த்ததும் எழுதியது இது..

மோட்டார் சத்தங்களுக்கு நடுவே
தனித்தலைகிறது அந்தப் பாடல்..

ஏதோ ஒரு கவிஞனின்
கண்ணீர்ப் பாடலையும்
ஏதோ ஒரு தாயின்
தாலாட்டுப் பாடலையும்
காற்றெங்கும் அலையவிட்டு
காதுகளைத் தட்டுகிறது
அந்தப் பாடல்..

தத்தம் பாக்கெட்டுகளின் கதவை
அந்தப் பாடல்கள் தட்டுவதாக எண்ணி
கைகளால் பாக்கெட் மூடி
அவசரமாக நகர்கிறோம் நாம்..
ஆனால் யாருக்குக் கொடுக்கிறோம்
என்பதை அறியாமலே
இசையைக் கொடுத்தபடிதான் இருக்கிறான்
அந்தப் பாடகன்..

உணவுதேடும் ஒரு
நாய்க்குட்டியின் வாலாட்டலைப் போல
அல்ல அந்தப் பாடல்..
உழைத்தவன் ஒருவனின்
வியர்வை வாசத்தைப் போலத்தான்
அது பரவுகிறது..

பாடியவனுக்கு கண் இல்லை
என அறிந்த பலருக்கும்
அந்தப் பாடலுக்கு கண் இருந்தது
தெரியாமலேயே போய்விட்டது..

No comments:

Post a Comment