Thursday 14 November 2013

அதோ அந்த மூலையில்தான்
கறுப்புக் கிடாய் 
கட்டிக் கிடக்கும்..

அந்த மரமிருந்த இடத்தில்தான்
அப்பத்தா
எந்நேரமும் இருந்தபடி
புளிதட்டிக் கொண்டோ..
அரிசி புடைத்துக கொண்டோ
எள்ளில் கல் நீக்கியபடியோ
எங்கள் எல்லாரையும்
கண் வழியும்
அன்பினால்
ஆண்டு கொண்டு இருந்தாள்..

அஞ்சாப்புக்கு முதல் ஐந்து நாள்
பள்ளிக்குப் போகாதபோது
அதோ அந்த கல்தூணில் கட்டி வைத்துதான்
அப்பா அண்ணனை அடித்தார்..

அதோ அந்த வடக்கு சுவரோரம்தான்
அப்பாவின் அனுமதியின்றி
மாமா மறைந்து வந்து நின்று
அம்மாவுக்கு
பணமும் பண்டமும்
கொடுத்துவிட்டு
கொஞ்சம் கண்ணீரையும்
கவலையையும் வாங்கிப் போகும்..

இதோ கிடக்கிறதே
இந்த மண்..
இதில் விழுந்துதான்
நாங்கள் முளைத்ததும் வளர்ந்ததும்..

ஏழு கடல்
ஏழு மலை
ஏழு அக்கினி குண்டம்
எல்லாம் தாண்டி இருக்கும்
ராச்சசனின் உயிர் போல
நகரக் காட்டின் நடுவில்
எங்கோ கிடக்கிறோம் நாங்கள்..
இடிந்த வீட்டை
காணச் சகியாமல்
ஊருக்குள் ஏதோ ஒரு
காரை வீட்டின் தனிமையில் உழன்றபடி
தன் உயிர் இருக்கும் திசையை
நாள் தோறும்
பார்த்தபடியே இருக்கிறாள்
என்
அம்மா என்னும் ராச்சசி..

No comments:

Post a Comment