Thursday 14 November 2013

யாரையோ நினைவுபடுத்துகிறது
ஒரு மஞ்சள் பூவோ
அல்லது 
ஒரு பட்டாம்பூச்சியோ..

யாரோ கடந்து போகிறார்கள்
ஒரு புன்னகையில்
அல்லது
ஒரு கன்னச்சுழிப்பில்
யாரையோ நினைவுபடுத்தி..

முகமறியா
டெலிபோன் பெண்
யாருடையவோ தயக்கங்களை
நினைவுறுத்தி
வாங்கிக்கங்க சார் என்கிறாள் –
அவளறிய மாட்டாள்
அவள் குரல்
எனக்கு இருபதாண்டு பழமையானதென்று..

இருண்ட ஒரு திரையரங்கின்
தனிமூலையொன்று
யாருடையது என்று அறியாமலே
சில கண்ணீர்த்துளிகளை
கர்ப்பத்தில் சுமந்தபடி
இருக்கிறது
பத்தாண்டுக் கணக்காக..

ஒரு பூ
ஒரு பட்டாம்பூச்சி
ஒரு குரல்
ஒரு தியேட்டரின்
உடைந்த இருக்கை..

இவை ஏதையும்
அறியாமல்
குழந்தைகள்
புன்னகைத்தபடியே இருக்கிறார்கள்
நமது கண்கள்
சிரிப்பினால் கலங்குவதாக எண்ணி..

No comments:

Post a Comment