Sunday 23 March 2014

உணவுண்ணும் போதும்
ஒரு பொருளை எடுத்து வழங்கும்போதும்
எந்த விரல்களுடனும்
ஒட்டாமல் நிற்கிறது அந்த விரல்..
வழங்கும்போது
தான் உயர்வென்று
அறிவிக்காமல் அறிவிப்பதே
அதன் தனிமைதான்..
எஸ்தரக்காவை
இரு வீட்டாரும் புறக்கணிக்கையில்
அந்த சுட்டு விரல் போலதான் இருந்தாள்..
அது திரும்புவதுமில்லை
விரும்புவதுமில்லை..
திருட்டில் உடன்பாடில்லாத
உடன் திருடன் போல
கண்ணை மூடியபடி
தனித்தே இருக்கிறது..
மொத்தக் கையினின்றும்
தனியொரு விரலை தனித்தெடுத்து
வழிபடவோ, முத்தமிடவோ
முடியாதென்பதாலேயே
என் பிரார்த்தனைகளை
அவ்வப்போது கொன்றபடி இருக்கிறேன்..
சுட்டும் போதோ
மிரட்டும்போதோ
மூக்கு நோண்டும்போதோ
தன் பணியைச் செவ்வனே செய்யும் அது
உழைக்கையில் ஒரு காலும்
உடன் வந்ததில்லை..
வாணாள் முழுக்க
பிரியங்களைத் தேடுமொருவன்
அன்பர்களிடத்தெல்லாம்
சுட்டுவிரலைத் தேடித்தேடி
தோல்வியில் களைத்து
இரவோடு கரைந்துதான் போகிறான்..
ஒன்றா அவனுக்கான விரலை
கண்டுபிடித்துக கொடுங்கள்
அல்லது
சுட்டு விரலிடம்
மற்ற விரல்களோடு
அன்பு பாராட்டச் சொல்லுங்கள்..
விரல்களின் தனிமையில்
திகைத்து நிற்கிறான் அவன்..

No comments:

Post a Comment