Sunday 23 March 2014

அந்த
அநாதை தெருப்பாடகனிடமிருந்து
தந்திரமாக ஒருபாடலை
திருடிவிட்டான் அவன்.
ஆசுவாசத் தனிமையில்
அப்பாடலின் வாலில்
நூலினைக்கட்டி
பறக்கவிட்டுப் பார்க்கிறான்.
அது சோர்வுற்று தரையமரும்போது
நிதானமாக
முதலில் கால்கள்
பின்னர் இறகுகள் என்று
ஒவ்வொன்றாக
ரசனையுடன் பிய்த்தெடுக்கிறான்
அவன்.
ஏனென்ற கேள்வியுடன்
பெரியகண்கள் கலங்கியிருக்க
அவனையே பார்த்தபடி இருக்கும்
பாடலின் இதயத்தில்
கடைசி குண்டூசியையும்
புன்னகையுடன் செலுத்துகிறான்.
வெடித்த இதயத்தினின்று
தூவிகளைப் போல
காற்றெங்கும் பரவி
விரைந்து விலகிச் செல்கின்றன
சின்னஞ்சிறு ஸ்வரங்கள்.
திகைத்து செயலற்று
பறந்து போகும் அவற்றைப்
பார்த்தபடி இருக்கும்
அவனுக்குத் தெரிந்துவிட்டது
இன்றிரவும் ஒருபாடல்
கங்கினைப் போல் அவனைப் பொசுக்க
நனைந்தே கருகப்போகிறது
ஒரு தலையணை..

No comments:

Post a Comment