Sunday 23 March 2014

வயலினின் நாண் ஒன்றில்
வயலினின் வில் ஒன்று
இழுக்கும் ஙீ
என்ன ஸ்வரம் என்றால் எனக்கென்ன.
முகமறியாப் பாடகி
தொண்டையில் துவங்கி
உச்சி மண்டையில் முடிக்கும்
அறியா மொழிப் பாடல்
வெறும் ஒலிக்குறிப்புகளே
எல்லாப் பாடல்களிலும்
இழந்தவொன்றைத்தான்
நாமெல்லோரும் தேடுகிறோம்
ஓர் ஒலி என் காதுக்குள் நுழைந்து
கேள்வி கேட்கிறது
ஓர் ஒலி
சிரிப்பவர்களனைவரையும்
சற்று நேரம்
அமைதியாயிருக்க வைக்கிறது
ஒழுங்காக அமைந்த
அந்தவொலி
தேம்பாமலிருக்க முயற்சி செய்யும்
என்னை
கண்ணீர் சிந்த வைக்கிறது
எனக்கு இசை தெரியாது
இசைக்கு அழ வைக்கத் தெரியும்

No comments:

Post a Comment