Wednesday 11 December 2013

ஒரு மணு விறகு என்பது என்ன என்பது உங்களுக்குத் தெரியது.. மணு என்பது 10 கிலோ.. ஆனால் எங்க ஊரில் அதை ஒரு தூக்கு என்று சொல்வோம்..

இப்போது gas cylinder களும் induction stove களும் வந்துவிட்ட இந்த காலத்தில் விறகு என்பது அர்த்தம் இல்லாப் பொருளாகவே மக்களால் பார்க்கப்படுகிறது..

இன்றைய எனது சென்னை வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் வர தாமதமாகும் ஒரு நாளோ அல்லது ஒரு வாரமோ எங்கள் வீட்டின் சமநிலை குலைவது என்பது நான் கண்கூடாக காணும் ஒரு தண்டனைப் பருவமாக இருக்கிறது..

இது இப்படியிருக்க எனது சிறார் பருவம் விறகினாலானதாகவே இருந்தது.. அம்மா எப்போதும் கையிலிருக்கும் காசுக்குத் தக்கதாகவே விறகு வாங்கிவரச் சொல்லுவாள்.. ஒரு தூக்கு விறகு (10 கிலோ) அப்போது 5 ரூபாயாகஇருந்தது. ஏழரை ரூபாய் இருந்தால்ஒண்ணரை தூக்கு.. 50 ரூபாய் இருந்தால் பேரம் பேசி பதினோறு தூக்கு வாங்கிவிடலாம்..

வாங்கி வரும் விறகு உடனே பயன்படக் கூடியதாக இருக்க 10 சதத்துககும் குறைவான வாய்ப்புதான் உண்டு.. அது பெரும்பாலும் ஈர விறகாகததான் இருக்கும். கண் எரிய, மூச்சு முட்ட ஊதி ஊதி அம்மா சமைத்துக் கொடுப்பது எல்லாம் அவளது உயிர் மூச்சு என்பதை அறியாமலே நாங்கள் உண்போம்.. அதில் ஆயிரம் நொள்ளைநொட்டைகள் வேறு.. 

விறகை அணைத்ததும் மிஞ்சும் கரியை சேமித்து குமுட்டி அடுப்பிலும் சமைப்பாள் அம்மா. அவளது வயிறையும் சேர்த்தால் ஆறு வயிறுகள் உண்ண வேண்டும் எங்கள் வீட்டில்.. அனைத்துமே பசித்த வயிறுகள்.. அதில் எங்கப்பா மட்டும் பசித்த வயிறும் கொடுக்கு நாக்குமாகஇருப்பார்.. சரியான நேரத்துக்கு சாப்பாடு வரவேண்டும்.. அவர் எதிர்பார்க்கும் ருசியோடும் அது இருக்க வேண்டும்..

இவற்றை எல்லாம் சமாளித்துதான் குடும்பம் நடத்தினாள் பாலாம்பாள்..

அப்போது அவளது நிலை மட்டும் இப்படி இல்லை.. சமூகத்தின் பெரும்பான்மைப் பெண்களின் நிலை அப்படித்தான் இருந்தது.. குடும்பத்தின் உணவு பங்கிடும் பொறுப்பு பெண்களிடமே அளிக்கப் பட்டிருந்தது.. அனைவருக்கும் வயிறார உணவிடாதவள் பெண்ணே அல்ல என்று அவளுக்குப் பயிற்றுவிக்கப் பட்டிருந்தது.. அது மட்டுமல்ல.. வயிறார சாப்பிடுபவள் பெண்ணே அல்ல என்பதும் அவளது மண்டையில் திணிக்கப் பட்டே இருந்தது.. (உண்டி சுருங்குதல் பெண்டிற்கழகு.. இதை அவ்வை என்ற பெண்தான் எழுதினாளா இல்லை fake ID யில் வேறு யாரேனும எழுதியிருந்தார்களா..?)

சாப்பாடு நன்றாக இல்லை என்று தட்டை வீசி எறிதல், தட்டு நிறைய சோறிருக்க அதிலேயே கை கழுவுதல், மற்றும் அழுவது வரை திட்டுதல் என்று அப்பா அவரது சித்திரவதை முறைகளை கையாள, என்னால் இயன்ற வரை அப்பா மீதான கோபத்தை தணித்துக் கொள்ள உண்ணாவிரம் இருந்து அம்மாவை டார்ச்சர் செய்து எனது அவமானத்தை சமன் செய்து கொள்வேன்..

இவை யாவற்றிற்கும் மூல காரணம் பெண்தான் குடும்பத்தின் பசியை ஆற்ற வேண்டும்.. என்ன நடந்தாலும் சரி.. எப்படியாவது - கெஞ்சியாவது - பெண் தன் குடும்பத்தின் பசியைப் போக்கியாக வேண்டும் என்ற கோட்பாடுதான் அனைத்திற்கும் மூலம்..

பசியாற்றுதலுக்கு உணவு முக்கியம்.. உணவு தயாரித்தலுககு விறகு முக்கியம்.. அதனாலேயே பெண்களுக்கு அரிசி வாங்குதலும் விறகு வாங்குதலும் தம் வாழ்வின் முக்கியமான நிகழ்வாக அன்று இருந்தன..கொடுக்கிற காசுக்கு தகுந்த விறகுதான் கிடைக்கும்.. ஆனாலும் ஒவ்வொரு முறையும் விறகுக் கடைக்காரரிடம் சண்டை போட்டு அவள் கொடுக்கும் பணத்துக்கு கொஞ்சமாவது உலர்ந்த விறகை பெற்றுவிட அம்மா முயன்றபடியே இருப்பாள்..

அப்போதைய வாழ்வில் விறகு அவ்வளவு முக்கியமானதாக இருந்தது.. இன்றைய வாழ்க்கை முறையில் கேஸ் (gas) வந்தபிறகு விறகுக்கான தேவை முற்றிலும் இல்லை என்றே நான் நினைத்திருந்தேன்.. ஆனாலும் சென்ற முறை ஊருக்குச் சென்றபோது சுடுதண்ணி வைப்பதற்காகவாவது எல்லா வீட்டிலும் இன்னும் விறகடுப்பு உயிரோடு இருந்ததை நான் பார்த்தேன்.. விறகடுப்பு என்பது பெண்களின் மீதான கட்டுப்பாட்டின் குறியீடாக இன்று வரை அப்படியேதான் இருக்கிறது..

சென்னையில் தாவரங்களின் வளர்ச்சி அபாரமாக இருக்கும்.. இப்படியொரு கறும்பச்சையுடன் மரங்களையோ செடிகளையோ நான் ஊரில்கூட பார்த்ததில்லை..அதன்காரணம் சென்னை என்பது ஆறுகளின் வடிநிலப் பகுதி.. வண்டல்கள் சேர்ந்து நின்ற வயற்காடு.. எத்தனைதான் சாலைகளைப் போட்டு புதைத்தாலும் அந்தமண் உள்ளேருந்து மரங்களுக்கு தனது வளத்தை வாரி வாரி வழங்கியபடியேஇருக்கிறது..

வெகுவாகவளர்ந்த மரங்கள் மின் லயன்களுக்கு இடையூறாகஇருக்கும் என்று மழைக்காலத்துககு முன்பாகமின்கம்பிகளுக்குப்பக்கத்தில் இருக்கும் மரக் கிளைகளை மின் வாரியத்திலிருந்து வெட்டத் துவங்குவார்கள்.. 

சமீப ஒரு மாத காலமாக எங்கள் பகுதியில் மரக் கிளைகளை வெட்டி வெட்டிப் போட்டுகொண்டே போகிறார்கள் மின்வாரியதொழிலாளர்கள்.. வெட்டப்பட்ட கிளைகள் தெருவோரங்களில் வெயிலில் காய்ந்தபடியும் மழையில் அழுகியபடியும் கிடக்கின்றன.. இதுவேஎங்கள் ஊர் என்றால் போட்டி போட்டுக் கொண்டுவந்து அவற்றை அள்ளிச் சென்று அடுப்புக்கு பயன்படுத்தத் துவங்கி இருப்பார்கள்..

ஆனால் இது சென்னை அல்லவா.. அந்த கிளைகள் குவிந்திருக்கும் பகுதிக்கு அருகிருக்கும் வீட்டுக் காரர்கள் சென்னைகார்ப்பரேஷனுக்கு போன் செய்து அந்த குப்பையால் கொசு பெருகுவதாகவும் அதை உடனே அப்புறப்படுத்தும்படியும் போன் செய்தபடியே இருக்கிறார்கள்..

அந்த போன் செய்யும் அனைவர் வீட்லும் அந்த போன் செய்பவர்களுக்கு அருகில் இருந்தபடி, விறகடுப்பில் சமைத்த ஒரு கிழவி அந்த காய்ந்த கிளைகளெல்லாம் குப்பை லாரியில் அள்ளிச் செல்லப்பட்டு எவருக்கும் பயனற்று அழிக்கப் படப் போவதைப் பற்றிய கவலையில் தனது சிறு வயதில் அவ்வளவு உலர்ந்த விறகுகள் கிடைக்காதது பற்றிய கவலையோடு குப்பை லாரிகளைப் பார்த்தபடி இருக்கக் கூடும்..

நீர் மட்டுமல்ல.. எப்போதும் நெருப்பும் ஒரு சமூகத்துக்கு சம்பாதிக்க வேண்டிய விஷயமாகவே இருக்கிறது..

பிரியமான இரவு வணக்கங்கள்..

No comments:

Post a Comment