Thursday 28 November 2013

புதையல் படலம்..


எங்கள் சிறுவர் பிராயம் கதைகளால் நிறைந்திருந்தது.. ஒவ்வொரு நண்பர்களைப் பற்றியும், தெருவில் தென்படும் ஒவ்வொரு மனிதர்களைப் பற்றியும், தெருக்கள் பற்றியும், வீடுகள் பற்றியும், பெண்கள் பற்றியும், மரங்கள் பற்றியும், மரத்தில் பூத்துதிரும் பூக்கள் பற்றியும் கூட கதைகள் குவிந்து கிடந்தன. வாழ்வின் மகிழ்வையும் துயரங்களையும் அப்போது மனிதர்கள் கதை சொல்லியே கடந்து போனார்கள் என்று தோன்றுகிறது. ஒரு வேளை அப்போது மனிதர்கள் மனிதர்களோடு பேசுதல் என்பது பேசுதலாகவே இருந்தது காரணமாக இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் பேச்சென்பது கதைதானே..

தேவதைக் கதைகளையும் பேய்க்கதைகளையும் விடுங்கள்.. என்னை அப்போது ரொம்ப சுவாரசியப்படுத்தியது புதையல் பற்றிய கதைகள்தான்.. எங்கள் ஊரின் முக்கியமான பணக்காரர் ஒருவர் அவரது வயலில் தோண்டியபோது ஒரு குடம் நிறைய தங்கம் புதையலாக கிடைத்துதான் பணக்காரர் ஆனார் என்றொரு கதை இருந்தது. படித்த பல கதைகளில் கதை மாந்தர்களுக்கு புதையல்கள் கிடைத்தபடி இருந்தன. எதோ விஷயத்துக்காக தோண்டும்போது புதையல் பானையில் கடப்பாரை பட்டு 'ணங்' கென்ற ஒலி கேட்பது என்பது கதையின் சுவாரசியமான கட்டமாகும். எங்காவது யாராவது எதாவது ஒரு காரணத்துக்காக நிலத்தை தோண்டுவதைப் பார்த்தால் கூட அங்கே நான் நின்று கவனிக்கத் துவங்கி விடுவேன். கடப்பாரை நிலத்தில் இறங்கும் ஒவ்வொரு முறையும் அந்த ணங் சத்தத்தை எதிர்பார்த்தபடியே நிற்பேன்..

அடல்ட்ஸ் ஒன்லி மாதிரி சிறுவர் ஒன்லியான கதைகளும் நம்பிக்கைகளும் அப்போது அதிகம். கொக்கு கூட்டம் வானில் பறப்பதைக் கண்டால் விரல்களை மடக்கி நகங்களை ஒன்றோடொன்று உரசியபடி 'கொக்கே கொக்கே பூப்போடு.. கொக்கே கொக்கே பூப்போடு..' என்று மொத்தமாக கத்துவோம். அப்படி கத்தினால் நகங்களில் வெள்ளை வெள்ளையாக புள்ளியனைய பூக்கள் விழும் என்பது நம்பிக்கை.. (அட பக்கிகளா.. நகத்தில் வெள்ளைப் புள்ளிகள் விழுந்தால் அது கால்ஷியம் குறைபாடுடா என்று சொல்லித் திருத்த அப்போதுயாரும் இலலை..) அது மட்டுமல்ல புதுத்துணியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நம்ம அதிஷா வினோ பரப்பிய ஏழுசெக்கண்ட் ஏழுமலையான் படம் மாதிரி கொக்கு நம் நகங்களில் பூவும் போட்டு புதுத்துணியும் வழங்கிய நண்பர்கள் பற்றிய கதைகள் அப்போது ஏராளம் உண்டு..

கழுதை கத்துவதை கேட்டால் தலைமுடியை பிடித்துக் கொள்ள வேண்டும்..(எப்படி யோசித்தாலும் இதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை) அதே மாதிரி ஆயி இருந்துவிட்டு இன்னமும் கால் கழுவாதவன் நம்மை தொட வரும்போது தலைமுடியை பிடித்துக் கொள்ள வேண்டும்.. (இதுவும் என்ன லாஜிக்..?) ஒரே கலர் சட்டை போட்டுக் கொண்டு வந்தால் ஒருவரை ஒருவர் கிள்ளிக் கொள்ளவேண்டும்.. என்பது மாதிரியான நான்சென்ஸ் லாஜிக்குகள் அப்போது ஏராளமாக உண்டு.

இதில் ஒன்றுதான் செம்போத்து பற்றிய நம்பிக்கையும் கதையும். முதலில் செம்போத்து என்பது என்ன என்று சொல்லிவிடுகிறேன். அப்படியே காகத்தை ஜெராக்ஸ் பண்ணி வைத்த மாதிரி இருக்கும் பறவை அது. ஆனால் வால் மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜகாக இருக்கும். அதே மாதிரி நம்ம இளவட்டங்கள் தலையை கலரிங் செய்து முன்முடியை மட்டும் பிரவுன் அடித்துக கொள்கிறாரகளே.. அதே மாதிரி இரண்டு இறக்கைகளிலும் கொஞ்சம் பிரவுன் வண்ணம் தீற்றி இருக்கும்.. ரொம்ப தூரம் எல்லாம் பறக்காது. கொஞ்ச தூரம் பறத்தலும் பின்னர் தரையோட்டமுமாக இருக்கும். அதற்காக flightless bird கிடையாது.. முக்கியமாக உஹு உஹு என்ற அதனுடடைய கூவல் அல்லது சத்தம் தனித்தன்மை உடையது.. பழைய படங்களில் இரவில் நடக்கும் திகில் காட்சிகளில் திகிலைக் கூட்ட இந்த சத்தத்தைத்தான் ஸ்பெஷல் சவுண்டு எஃபெக்ட்டாக பயன்படுத்தி இருப்பார்கள்..

செம்போத்து ரொம்ப கூச்சமுள்ள பறவை.. அரிதினும் அரிதாகத்தான் கண்ணில் படும்.. அந்த அரிதுதன்மை காரணமாகவே அதைப் பற்றிய ஒரு நம்பிக்கை எங்களை மாதிரி சிறுவர்களுக்கிடையில் இருந்தது..

செம்போத்தின் கூட்டில் ஒரு சஞ்சீவி வேரை வைத்திருக்கும். அந்த வேரை வைத்திருப்பதனால்தான் அது யார் கண்ணிலும் படாமல் அந்த கூட்டை மறைத்து வைத்து வாழ்கிறது. அந்த கூட்டை கண்டுபிடித்து அந்த சஞ்சீவி வேரை கண்டு பிடித்தால் அது புதையல் இருக்கும் இடத்தை நமக்கு காட்டிக் கொடுக்கும். அது மட்டுமல்ல. அந்த வேர் கையில் இருந்தால் நாம் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து போகமுடியும்.. இதுதான் அந்த நம்பிக்கை..

எனக்கு இந்த இரண்டுமே ஏற்கத் தக்கதாகத்தான் இருந்தது. புதையல் கிடைத்தாலும் சந்தோஷமே.. இன்விசிபிள் மேனாக மாறினால் டபுள் சந்தோஷமே.. இன்விசிபிள் மேனாக கையில் சஞ்சீவி வேருடன் புதையலைத் தேடி நான் அலைவது மாதிரியான கற்பனைகள் எனது ஆர்வத்தை அதிகப்படுத்தியபடியே இருந்தன.

எப்போதாவது கண்ணில் படும் செம்போத்தை துரத்தி அதன் கூட்டை எப்படியாவது கண்டு பிடித்து விடுவதற்காக நாங்கள் பட்ட பாடு ஒரு நாவலைத் தாண்டும்.  சுருளியாறு மின்நிலையத்தில் எங்க அப்பா வேலைபார்த்த காலத்தில் செம்போத்து கூட்டைத் தேடி காடெல்லாம் அலைந்திருக்கிறோம்.  அப்பாவிடம் அடி வாங்கும் பொழுதிலெல்லாம் என்னுடைய ஒரே ஆசை : ஒரே ஒரு சஞ்சீவி வேர். அது மட்டும் இருந்தால் போதும் இந்த மனுஷன் அடிக்க வரும்போது அப்படியே மாயமாய் மறைந்து விடலாம்..

கடைசி வரை எங்கள் கண்ணில் படும் செம்போத்து தன் கூட்டை காட்டவே இல்லை..

பின்னர் இன்னொரு செய்தி எங்கள் வீட்டில் உலா வந்தது. எங்கள் பூர்வீக வீட்டில் ஒரு புதையல் உள்ளது.. அந்த புதையலை ஹரி என்ற பெயருளள ஒருவன்தான் எடுப்பான் என்று எங்கள் கொள்ளுத்தாத்தா ஜோசியம் பார்த்து சொன்னதாக ஒரு தகவல் உண்டு.. அதை கேட்டதில் இருந்து சிறு வயதிலிருந்தே எனக்குள் ஒரு நமநமப்பு உண்டு. எங்கள் குடும்பத்தில் மொத்தம் ரெண்டு ஹரி உண்டு.. ஒருவன் எனது அத்தை மகன் ஹரி என்ற ஹரிகிருஷ்ணன்.. இன்னொன்று ஶ்ரீதரன் என்று அழைக்கப்படும் ஹரிஹரனாகிய நான்..

இந்த இரண்டு ஹரிகளில் எந்த ஹரி அந்த புதையலை எடுக்கப் போகிறானோ என்று பெரியவர்கள் கொளுத்திப் போட்ட திரி ரொம்ப நாட்களாக என் மனதுக்குள் எரிந்து கொண்டிருந்தது.. (மச்சான் ஹரி மனதிலும்தான்).. கடைசியில் எங்க அப்பாதான் பங்காளிகளுக்கு பணம் கொடுத்து அந்த வீட்டை வாங்கினார்..

அப்படியும் எங்கள் வீட்டு பாவுள்ளை இடித்துக கட்டும்போது எதாவது ணங் சத்தம் கேட்கிறதா என்று நான் கொஞ்ச நாள் முன்னால் கூட எதிர்பார்த்தேன் என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்..

ஒரு வேளை பின்னாளில் அந்த வீட்டை நான் வாங்கி இடித்து ரீமாடல் செய்து கட்டினால் கட்டாயம் அங்கே புதையல் இருக்கிறதா என்று தேடுவேனாகத்தான் இருக்கும்..

இன்று இதை எழுதும்போது கூட புன்னகைக்கும் என் மனதின் ஒரு ஓரத்தில் பூ வேலைப்பாடுகள் செய்த புதையல் பானை ஒன்று உள் நிறைந்த தங்கக் காசுகளுடன் என்னைப் பார்த்தை கையசைத்தபடிதான் உள்ளது--

சென்ற முறை பைக்கில் கீழே விழுந்து கை எலும்பு முறிந்து அலைந்து கொண்டிருந்த போது கைக்கட்டைப் பார்த்த ஒரு நண்பர் கேட்டார் : என்ன சார் புதையல் எடுத்தீங்களா..? என்று

கொஞ்சம் யோசனைக்குப் பின் நான் சொன்னேன்.. ' இன்னும் இல்ல சார்.. ' என்று..


நீங்க என்ன சொல்றீங்க..? இன்னும் இல்லதானே..?

3 comments:

  1. உங்களுக்கு புதையல் போல, எனக்கு சான்ட்டா தாத்தா.. எனக்கு ஒரு உண்மைய போதிக்க பல வருசமாச்சு

    ReplyDelete
  2. அந்த அனுபவத்தை எழுதிட்டீங்களா அருள்..?

    ReplyDelete
  3. ஏதோ குறையுதுண்ணா...

    ReplyDelete