Thursday 14 November 2013

சிறு பருவத்துக் கனவுகள் என்னவெல்லாமாக இருக்கக் கூடும் என்று சொல்லி விளக்கிவிட முடியாது. ஒரு கட்டத்தில் எங்கள் எல்லாரையும் அழ அழ வைத்து முடிவெட்டும் எங்கள் வீட்டு நாவிதராக நான் ஆசைப்பட்டிருக்கிறேன்..

ஒரு சமயம் எங்கள் பள்ளி ஹாஸ்டலில் முதல் வகுப்புக்கு (first class hostel students)) (அவர்களுக்கு மட்டும்தான் வாராவாரம் அசைவம்) தயாராகும் ஞாயிற்றுக் கிழமை ஆட்டுக்கறிக்கு ஆட்டை அறுத்து கூறு போடும் முஸ்லிம் பெரியவராகவும் ஆசைப்பட்டிருக்கிறேன்.. (ஒரு விதத்தில் அதன் பின் ஒரு கோழிக்கறிக் கடையில் வேலைபார்த்து அந்த ஆசையை தீர்த்துக் கொண்டேன் என்றும் சொல்லலாம்.)

இவை தவிர எண்ணி முடியாத அல்லது எண்ண வேண்டாத ஆசைகள் என் பால்ய பிராயத்தில் உண்டுதான். இன்றைக்கும் என்றைக்கும் அன்றைக்கும் கூட சிறுவர்களின் பிரியம் வண்டிகளின் மீதுதான். அது இரு சக்கர வண்டியாகட்டும் நான்கு சக்கர வண்டியாகட்டும்.. இரண்டாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைககிறேன். நான் அத்தை வீட்டில்படிக்கப் போடப்பட்டு பள்ளிக்கு போய்க் கொண்டு இருந்தேன்..

எங்கள் வீட்டுக்கு ஆறாவதாக ஊர்க்கிணற்றுக்கு முன் உள்ள வீட்டில் ஒரு டாக்டர் இருந்தார். அவர் ஒரு டுபுடுபு வண்டி வைத்திருந்தார். (சிறுவர்களின் பாஷையில் என்ஃபீல்டு பைக்குகள் அப்போது டுபுடுபு வண்டிதான்). ஊரின் அனைத்து சிறுவர்களின் ஒரே ஆசை அந்த வண்டியில்ஏறி உட்காருவது என்பதுதான். வண்டிக்கான பாதுகாப்பு மிக மிக அதிகம். வாசலிலேயே திண்ணையில் உட்கார்ந்து டாக்டரின் தாயார் கண் கொத்திப்பாம்பாக வண்டியை கவனித்தபடி இருப்பார். எவனாவது வண்டியைத் தொட்டாலே வசவுகளால் பஸ்பமாக வேண்டியதுதான். கிழவிக்கு பயந்தே அவர் இருந்தால் எல்லோரும் நல்லபி ள்ளையாக அந்த வீட்டைக் கடந்து விடுவோம்.

என் கெட்ட நேரம்... ஒருநாள் அந்தகிழவி அவளுக்கான இடத்தில் இல்லை. தெருவில் நான் மட்டுமே.. அந்த பளபளப்பான வண்டி என்னை கண் சிமிட்டாமலே அழைத்தது. யாரும் இல்லாத தைரியம் எனினும் வண்டியில் ஏறி உட்காரும் துணிச்சல் எனக்கு இல்லை. வெகுநாள் ஆசை சத்தம்வருகிறதோ இல்லையோ.. அந்த வண்டியின் ஹாரனை ஒரே ஒரு முறை அடிக்க வேண்டும்என்பதுதான். யாரும் இல்லாத தைரியத்தில் அந்த ஹாரனை ஒரு முறை அழுத்தினேன். என் கெட்ட நேரம். அந்த ஹாரன் ஓங்கி ஒலித்தது.. மட்டுமல்ல.. அந்த ஹாரன் சுவிட்ச் அப்படியே ஸ்டக் ஆகி விட்டது.

எட்டு மணி சங்கைப்போல ஹாரன் உய்ய்ய்யென ஒலிக்கஆரம்பித்தது. நான் உடல்பதைத்து அதை நிறுத்த என்னவென்னவோ பிரயத்தனங்கள் செய்தேன். எல்லாமே வீணானதும் அந்த இடத்தைவிட்டு ஓடி விட்டேன்..

எழவெடுத்த கிழவி எங்கிருந்து பார்த்தாளோ தெரியாது. எங்கள் அத்தை வீட்டில் சென்றுவத்தி வைத்து விட்டாள். எங்கள் அத்தை என் அ ப்பாவுக்கு அக்கா - அடிப்பதிலும் கூட. அன்றைக்கு அடி பின்னி எடுத்துவிட்டாள்..

அன்று துவங்கியதா என்று தெரியாது.. இரு சக்கர வண்டிகளின்மீதான பிரியம் சாஸ்வதமாக மனதாழத்தில் இருந்தபடியே இருந்தது..

பின்னர் வளரிளம் பருவத்தில் நண்பர்கள் ஒவ்வொருவராக வண்டி வாங்கினார்கள். டிவிஎஸ் 50, யமாஹா, டிவிஎஸ் சுசுகி என்று எல்லா வண்டிகளிலும் நான் பின்சீட் பயணி மட்டுமானேன். ஒரு போதும் எந்த வண்டியையும் ஓட்டியவனில்லை. ஒரு முறையாவது காலை வைத்து அழுத்தாமல் தானாக ஓடும் ஒரு வண்டியை ஓட்ட வேண்டும் என்பது ஜெனமங்களின் கனாவாகத் தொடர்ந்தது..

முப்பத்தைந்து வயது வரைக்கும் சைக்கிள் தவிர வேறெதையும் ஓட்டி அறியாத ஒருவனுக்கு நண்பன் அருள் எழிலன் தனது டிவிஎஸ் சேம்ப்பை குறைந்த விலைக்கு அருளினான்.. முதன் முதலாக ஒரு தானியங்கி வண்டியை சென்னையின் தெருக்களில் ஓட்டும்போது நேர்ந்த புல்லரிப்பை என்னால் எந்த வார்த்தை கொண்டும் விளக்க முடியாது..

பல வருடங்களுக்கு அந்த வண்டியே எனது அடையாளமாக இருந்தது..

பின்னரும் பல வண்டிகள் ஓட்டி விட்டேன். பாலாவின் (பாலமுருகன்) புண்ணியத்ததில் இப்போது ஒரு டிவிஎஸ் ஸ்கூட்டி ப்ளஸ் ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்.. ஆனாலும் சொந்தகாசில் வாங்கிய அந்த டிவிஎஸ் எக்செல்லை மறக்க முடியாது. அதனால்தான் இன்றளவும் அதை எங்கள் ஊரில் எங்கள் வீட்டில் அதை அப்படியே வைத்திருக்கிறேன்.. என் அடையாளத்தைப் பாதுகாப்பது போலத்தான் உணர்கிறேன்..

இந்தமுறை ஊருக்குப் போயிருந்தபோது பிரியத்துடன் அதன் மீதுஉட்கார்ந்து பார்த்ததோடுசரி.ஓட்டிப் பார்க்க முடியவில்லை.. ஆனாலும் அது ஒரு யட்சிணியைப் போல மனதுக்குள் என்னைப் பின்தொடர்ந்தபடிதான் இருக்கிறது. என் வேண்டுகோளுக்கு இணங்க அதை புகைப்படம் எடுத்துகொடுத்ந தம்பி பாலாஜிக்கும் நன்றிதான். வேறென்ன சொல்ல..

No comments:

Post a Comment