Saturday 23 November 2013

முதலிலேயே எல்லோரையும் எச்சரித்து விடுகிறேன்.. இந்த கதையில் சரிபாதி புனைவுதான்.. அல்லது இந்தக் கதையில் சரிபாதி நிஜம்தான்.. அவரவர் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம்..

நான் எழுத நினைத்த 13 காதல் கதைகளில் இரண்டாவது இதுதான்.. இதுவும் காதல் கதைதான்.

அப்போது நான் டவுசர் போட்டு பள்ளி சென்று கொண்டிருந்த காலம். மீசை அரும்பத் துவங்கி ஊரெல்லாம் நடக்கும் காதல் விவகாரங்கள் மட்டும் கண்ணில் பட்டபடி இருக்கும் பருவம். (உடனே ஊரெல்லாம் எல்லோரும் காதலித்துத் திரிந்தார்கள் என்று உங்கள் கற்பனைக் குதிரையை ராங் ரூட்டில் அலைய விட வேண்டாம். காதல் அப்போது மிக மிக அபூர்வம். ஒரே ஒரு செய்திதான் என்றாலும் அது மாதக்கணக்கில் பலர் வாயில் விழுந்து வெளிவந்தபடி இருக்கும்)  அந்த அண்ணன் அந்த அக்காவை காதலிக்கிறானாம்.. அந்த அண்ணனும் அந்த அக்காவும் கோவில்ல பகல் 12 மணிக்கு மீட் பண்ணிக்கிறாங்களாம் என்ற செய்திகள் விடலைக் காதுகள் நுழைந்து வாய்கள் வழியாக விரைவாகப் பரவும் ஸ்டேட்டஸ்கள்.. லைக்கும் அதிகம்.  ஷேரிங் மிக மிக அதிகம்.. இவை தவிர அந்தப் பொண்ணு உன்னை அடிக்கடி பாக்குறா. அவன் அந்த பொண்ணு தெருப்பக்கம் சுத்துறான் என்ற  அப்டேட்டுகள் தனியாக அலையும்..

நான் படித்தது பக்கத்து ஊர் பள்ளியில். அந்த பள்ளியில் ப்ளஸ் டூ உண்டு. கோ எஜுகேஷன். பள்ளிப் பருவத்து காதல்கள் கொஞ்சம் என்ன ரொம்ப ரொம்ப அபூர்வம்தான். எவனாவது அந்த பொண்ணை லவ் பண்றேன்னு தனியாக மூத்திர சந்துக்குள் நின்று தனக்கு தானே சொல்லிப் பார்த்தால் கூட விஷயம் வெளியே தெரிந்து விவகாரமாகி பெண்வழி சொந்தக்காரர்கள் எல்லாரும் குறைந்தபட்ச ஆயுதங்களோடு வந்து அதிகபட்ச சேதாரங்களை உண்டு பண்ணிவிட்டுப் போவதற்கான சாத்தியக்கூறுகள்தான் மிக அதிகம்..

இந்த காரணத்தினாலேயே அப்போது தத்தம் உயிருக்கு துணிந்து காதலித்தவர்கள் எல்லோருமே புரட்சியாளர்களாக கருதப்பட்டார்கள். (எங்களால் என்பதை இங்கு அழுத்திச் சொல்லிக் கொள்கிறேன். மற்றபடி பெரியவர்களால் அவர்கள் சமுதாயத்தின் விஷ ஜந்துக்களாக கருதப்பட்டார்கள் என்பதை சொல்லித் தெரியணுமா என்ன..?)

சரி. நம்ம கதைக்கு வருவோம். இப்படி காதல் அபூர்வமான, வசீகரமான, விஷ ஜந்துவாக சமூகத்துக்குள் வளர்ந்து வந்த காலகட்டத்தில் புஷ்பாக்கா என்றொரு அக்கா ப்ளஸ் டூவில் படித்து வந்தாள். அவளைப் பற்றி முதலில் உங்களுக்கு தெளிவாக வர்ணித்து விட வேண்டும்.

தலைவி சராசரியை விட உயரம். திணுக்கென்ற உடற்கட்டுடன் நடையே கெ◌ாஞ்சம் ஆம்பிளை மாதிரிதான் இருக்கும். அகலமான முகம். அப்போதைய பிரபல வில்லன் நடிகரான ராதாரவிக்கு பெண் வேஷம் போட்டு கறுப்பு கலர் அடித்து விட்ட மாதிரிதான் இருப்பாள். குரல் கூட கொஞ்சம் அந்த சாயலில்தான் இருக்கும். தலைவி அதிரடிக்கு பெயர் போனவள். சும்மா விளையாட்டுக்கு நம்மகூட படிக்கிற பிள்ளைதானே என்று பையன்கள் எதாவது கமெண்ட் அடித்தாலே தலைவி அடிதடியில் இறங்கி விடுவாள். ஆக்சுவலாக அதை அடிதடிஎன்று சொல்ல முடியாது. ஒன் வே டிராஃபிக் மாதிரிதான். தலைவி அடிப்பாள். தடிமாடு அடி வாங்கும். அவ்வளவுதான்.

புஷ்பாக்கா இவ்வளவு கோபக்காரியாக இருந்த போதிலும் அவளை தட்டிக் கேட்க அந்த வகுப்பில் படித்த ஒரு தடியனுக்கும் துப்பில்லையா என்று நீங்கள் நினைத்தால். சத்தியமாக இல்லை. அந்த கோழைத்தனத்துக்கு பின்னணியில் ஒரு டெர்ரரான ரகசியம் இருந்தது..

புஷ்பாக்காவின் அப்பா பெயர் செல்லையன். அப்படி சொன்னால் அந்த ஊரின் வங்கிழவனென்ன, போஸ்ட் மேனுக் கே கூட தெரியாது. கேஸ் செல்லையன் என்றால்தான் எல்லாருக்கும் தெரியும். (இங்கு சொல்லப்படும் கேஸ் என்பது gas அல்ல.. case.. கோர்ட்டில் போடுவார்களே. அந்த கேஸ். நீங்கள் பாட்டுக்கு gas செல்லையன் என்று தப்பர்த்தம் பண்ணிக் கொண்டு அவரது வயிற்றைப் பற்றிய கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்).

விஷயம் என்னவென்றால் கேஸ் செல்லையன் அடிதடியில் இறங்குகிற டைப் கிடையாது. அந்த பாடியும் அவ்வளவு வொர்த் இல்லை. ஆனாலும் ஊரையே தனது கேஸ் போடும் திறமையால் திணறடித்தவர் அந்த மாமனிதர். (டிராஃபிக் ராமசாமிக்கு எல்லாம் இவர் ரொம்ப ரொம்ப முன்னோடி). கோவிலுக்கு தலைவன் போகிறார். அங்கே அர்ச்சனை சீட்டு வழங்கும்போது தேவஸ்தான ஊழியர் பாக்கி 25 பைசா சில்லறை இல்லை என்று சொல்லிவிட்டால் போதும்.உடனே கேஸ் போட்டு ஊழிரை திணறடிப்பார். கிட்டத்தட்ட கோவிலில் பூஜையே நின்று போகுமளவுக்கு பெரிய பிரச்சினையாகிப் போகும்.

ஒரு தனியார் பள்ளியில் இவரது தம்பி மகனை சேர்க்கப் போகும்போது தலைமையாசிரியர் மதிக்கவில்லை என்பதற்காக கேஸ் போட்டு அந்த ஸ்கூல் கமிட்டிக்கு தடை வாங்கியவர் அவர். யூனியன் தேர்தலில் முறைகேடு என கேஸ் போட்டு தலைவரை பதவியேற்க முடியாத அளவு டார்ச்சர் கொடுத்தவர் அவர். இத்தனைக்கும் காரணம் ரொம்ப சிம்பிள்தான். சொத்து வரி கட்டியதற்கு ரசீது தருவதற்கோ இல்லை எதோ சர்ட்டிபி கேட்டுக்கோ தலைவர் கையெழுத்து வேண்டும் என்று இரண்டு நாள் அலைய விட்டுவிட்டார்கள். சட்ட ஞானம் மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில் செல்லையா வந்து விட்டால் ஜட்ஜே வந்தமாதிரிதான் ஊர் பெரியமனிதர்கள் உள்ளுக்குள் நடுங்கியபடி இருப்பார்கள். ஊர்ப் பெரிய மனிதர்களே நடுங்குகிறார்கள் என்றால் அவர்களுடைய வாரிசுகள் எம்மாத்திரம். அந்த பயத்தினாலேயே தலைவி புஷ்பாக்காவின் அடியையும் இம்சையையும் தாங்கியபடி இந்த ஒரே வருஷம் பொறுத்துக்கிட்டா போதும் இந்த ஸ்கூலை விட்டும் இவளோட டார்ச்சரை விட்டும் வெகு தூரம் ஓடி விடலாம் என்று பல்லைக் கடித்துக் கொண்டுதான் இருந்தார்கள் அந்த அண்ணன்கள்.

இப்போது புஷ்பா அக்காவைப் பற்றிய ஒரு தெளிவான பிம்பம் உங்களுக்கு வந்திருக்கும் என நம்புகிறேன். உரத்த குரலில் தலைவி பேசும் பேச்சு கூட இப்போது உங்கள் காதுக்கு கேட்கக் கூடும்..

இந்த நிலையில்தான் அவளுக்கு அந்த பீதியூட்டும் ஆசை வந்தது. (அவளுக்கு பீதியூட்டும் ஆசை இல்லை. யாருக்கு பீதியூட்டும் என்பதை மேலே படித்து தெரிந்து கொள்ளுங்கள்) அப்போது பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்த பாரதிராஜா படங்களைப் பார்த்து தொலைத்தாளா இல்லை அக்கம்பக்கத்தில் எதாவது எழவெடுத்த ஜோடி ஒன்று காதலிப்பதை பார்த்து இன்ஸ்பையர் ஆனாளா என்று தெரியவில்லை..

செந்தட்டிக்கு சனி திசை ஆரம்பிக்கும் ஒரு கெட்ட நாளில் தலைவி தானும் யாரையாவது காதலிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்..

இங்கே திடீரென எதற்காக செந்தட்டி வருகிறான் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. அதற்கு முன்னாடி செந்தட்டி யார் என்பதை நான் சொல்லி விடுகிறேன். தலைவன் கறுப்பாக நெடுநெடுவென இருப்பான். பெரும்பாலும் வேட்டி கட்டிதான் பள்ளிக்கு வருவான். படிப்பிலும் பெரிய ஆள் கிடையாது. விளையாட்டு என்றால் என்ன விலை என்பான். ஜோக் அடித்து நண்பர்களை கவர்பவனும் கிடையாது. எதோ அவங்கப்பா அவனை ஒரு டிகிரியாவது வாங்கியாகணும் என்று கட்டாயப் படுத்தியதால்தான் பள்ளிக்கே வந்து கொண்டு இருந்தான். பெரிய லட்சியங்கள் ஏதும் இல்லாத சராசரி எண்பதுகளின் தமிழ் இளைஞன்தான் அவன்.

முக்கியமாக இந்த காதல் கீதல் எல்லாம் அவனுக்கு தெரியாது. தேவையும் இல்லை. அடிதடிக்கு பேர் போன சாதியில் இருந்து வருபவன். அவங்க அப்பாவுக்கு பெரும் சொத்து உண்டு. படிப்பு முடித்ததும் அவனுக்கு கட்டி வைப்பதற்கென்று இரண்டு அத்தைகளும், இரண்டு அக்காக்களும் பெண்களைப் பெற்று வைத்துக கொண்டு ஒருவரை ஒருவர் முறைத்தபடி அலைந்து கொண்டிருந்தார்கள். மகளுக்கு கொடுத்து விடுவதற்காக 50 பவுன் 75 பவுன் என்று தங்கமும் அவரவர் வீட்டு பீரோக்களில் உறங்கிக் கொண்டு இருந்தது. இது தவிர அவனுடைய அம்மா மகனுக்கு திருமணத்தின்போது புல்லட் வாங்கித் தரச் சொல்லலாமா இல்லை கார் வாங்கித் தரச் சொல்லலாமா என்ற யோசனையில் வேறு இருந்தாள். படிப்பு முடிந்ததும் மகனுக்கு ஒரு ஃபைனான்ஸ் வைத்துத் தருவதற்காக ஊரின் மெயின் ரோட்டில் இருந்த கடையை இடித்துக கட்டிக் கொண்டிருந்தார் அவனது அப்பா. இத்தனை சிறப்பையும் மீறி காதலிக்க அவன் பைத்தியக்காரனுமல்ல. காதல் தேசத்தின் தியாகத் தலைவனுமல்ல.. அவனது எண்ணமெல்லாம் ஒரேயொரு பி.ஏ. அம்புட்டுதான்..

சரி. சனி அவன் திசையில் திரும்பி பெரும் மையலோடு அவனைப் பார்த்த நாளில் என்ன நடந்தது என்று பார்ப்போம். (அநேகமாக எல்லோரும் இப்பவே யூகித்து இருப்பீர்கள்.) ஆம். அதுதான் நடந்தது. காதல் வருவதற்கு காரணமே தேவை இல்லை என்பார்கள். புஷ்பாக்காவுக்கு காரணமே தேவைப்படவில்லை. கிளாசில் இருப்பவர்களிலேயே பணக்காரன் அவன் மட்டும்தான் என்ற காரணம் மட்டுமே போதுமானதாக இருந்திருக்கலாம. தலைவி எந்த சிந்தனையும் இல்லாமல் செந்தட்டிக்கே தன்னை  காதலியாகவும், மனைவியாககவும்  கொடுக்கும் அதிர்ஷ்டத்தை வழங்கிவிடலாம் என்ற முடிவு செய்து ஒரு இண்டர்வெல்லில் நேராக செந்தட்டியிடம் சென்று, 'டேய் செந்தட்டி. நான் உன்னை லவ் பண்றேன். நீ என்னை எப்பருந்து லவ் பண்ணப் போறன்னு சாயந்திரம் ஸ்கூல் விடுறதுக்கு முன்னாடி சொல்லிடு'  என்று சொல்லிவிட்டு அவளது காதலின் அடையாளமாக வீட்டிலிருந்து வரும் வழியில் வாங்கி வந்திருந்த கமர்கட்டு மிட்டாய்களை அவன் டெஸ்கில் வைத்து விட்டு போய்விட்டாள்.

வகுப்பே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. அனைவரும் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவனைப் பார்ப்பது போல செந்தட்டியை பெரும் துயரத்தோடு பார்த்தார்கள். செந்தட்டியோ கிறுகிறுத்துப் போய் உட்கார்ந்திருந்தான். அவனது டெஸ்க்கில் உட்கார்ந்திருந்த கமர்கட் மிட்டாய்கள் அவனைப் பார்த்து வில்லத்தனமாக புன்னகைத்துக கொண்டு இருந்தன. இண்டர்வெல் முடிந்து அடுத்த வகுப்புக்கு வேதியல் ஆசிரியர் வந்ததும் பாத் ரூம் வருகிறது என்று சொல்லிவிட்டு அவர் திட்டத் துவங்கும் முன் வெளியே போனவன் அப்படியே ஸ்கூலை விட்டு வீட்டுக்கு ஓடிவிட்டான்.

இரண்டு நாட்கள் தலைவனுக்கு தொடர் காய்ச்சல். விஷயத்தை வீட்டில் சொன்னால் பெரும் பிரச்சினை ஆகும். அந்த காலகட்டத்தில் ஒரு பெண் ஆணிடம் காதலை சொன்னாலும் ஆண் பெண்ணிடம் காதலைச் சொன்னாலும் ஆண்தான் குற்றவாளி. அடியெல்லாம் அவனுக்குதான் விழுகும். பெத்த அப்பனாத்தாள் கூட அவனை நம்ப மாட்டார்கள். தலைவன் எரிதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கத் துவங்கிவிட்டான். டாக்டர் சாதாரண காய்ச்சல்தான் என்று மருந்து மாத்திரைகள் கொடுத்து விட கடும் யோசனையோடும் கடும் காய்ச்சலோடும் வீட்டுக்குள் படுத்திருந்தவன் மீது மேலும் மையல் கொண்ட சனி புஷ்பாக்காவை அவன் வீட்டுக்கே அழைத்து வந்தான்.

'ரெண்டு நாளா செந்தட்டி எதுக்கு ஸ்கூலுக்கு வரலைன்னு வாத்தியார் கேட்டுட்டு வரச் சொன்னாரு..' என்றபடி அவள் வீட்டுக்குள் வந்தபோது காய்ச்சலால் ஏற்கெனவே உலர்ந்து போயிருந்த செந்தட்டியின் தொண்டை தீப்பிடித்து எரிதல் போலாயிற்று. சக்தி இருந்திருந்தால் அவன் அப்படியே கட்டில் பிளந்து பூமாதா தன்னை உள்ளே இழுத்துக் கொண்டிருக்கக் கூடாதா என்றெல்லாம் கூட வேண்டி இருக்கக் கூடும். காய்ச்சலின் பலவீனத்தாலும் சொந்த வீட்டிலிருந்து தப்பியோட வேறு இடமில்லாததாலும் அவன் திகிலோடு படுத்துக் கிடக்க வேண்டியதாகிப் போனது.

அவனுடைய அம்மாவுக்கு 'கூடப் படிக்கும் பிள்ளை'களின் இந்தப் பரிவைப் பார்த்ததும் நெகிழ்வாகிவிட்டது. காப்பித் தண்ணி கொடுத்துதான் அவளை அனுப்பி வைத்தாள். அவள் போன பின் அவனது கட்டிலில் உட்கார்ந்திருந்த பிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டும் அதே மர்மப் புன்னகையோடு அவனை பார்த்தபடியே இருந்தது..

சொல்லவும் முடியாமல் வாந்தியெடுக்கவும்முடியாமல் செந்தட்டியின் தவிப்பு பெரிதாகிக் கொண்டே போனது. தலைவி மிரட்டல்களின் அளவையும் கூட்டிக் கொண்டே போனாள். தலைவன் பித்து நிலைக்கு போய் கோவிலுக்கு எல்லாம் போகத் துவங்கி விட்டான்.

பள்ளியிலும் அவன் மீதான இரக்கப் பார்வைகள் பல்கிப் பெருகத் துவங்கி விட்டன. புஷ்பாக்ககாவோ அனைத்து நண்பர்களிடமும் செந்தட்டிதான் தனது வருங்கால கணவன் என்று அறிவித்தபடியே இருந்தாள். அவனுக்காக மதிய உணவு சேர்த்து கொண்டு வருவது. அவனுக்காக இலந்தைவடை வாங்கி வருவது, அவனுக்காக பொட்டானிக்கல் கலெக்‌ஷனுக்கு போகும் டூருக்கு பணம் கட்டுவது என்று பல தீவிர வாத நடவடிக்கைகளையும் மேற்கொண்டபடி இருந்தாள்.  (இதில் பொட்டானிக்கல் டூருக்கு அவள் பணம் கட்டியதை மட்டும் தலைவன் ஏற்றுக் கொண்டான்). அப்போது இன்றைய நிலைமை போல டாஸ்மாக்குகள் சகஜமாக இருந்திருந்தால் அந்த ஊர் இன்னொரு குடிகாரனை சுவீகரித்திருக்கும். ஒரே ஒரு ஒயின் ஷாப்பும், குடிப்பது குற்றம் என்ற பொது மனநிலையும் இருந்ததால் தலைவன் குடியிலிருந்து தப்பி இருந்தான். ஆனால் புஷ்பாக்காவிடமிருநது தப்பிக்கும் வகை தெரியாமல் தவித்தபடி இருந்தான்..

அந்த ஊரின் காதலர் திருத்தலமே கோவில்தான். பழம் நழுவி பாலில் விழுந்து அப்படியே குதித்து வாய்க்குள்ளும் விழுந்தது மாதிரி செந்தட்டி கோவிலுக்குப் போகத் துவங்கியிருப்பதை கேள்விப் பட்டதும் புஷப்பாக்கா குஷியாகி விட்டாள். அவன் கோவிலுக்குப் போகும் நேரத்தை அறிந்து தானும் பட்டுப் பாவாடை தாவணி எல்லாம் அணிந்து கொண்டு கோவிலுக்குப் போகத் துவங்கினாள். தலைவனுக்கு இருந்த ஒரே புகலிடமும் இப்படியாக பறிபோனது..

புஷ்பாக்கா துரத்துவதும், செந்தட்டி ஒளிவதுமான இந்த விளையாடடு போகப் போக எங்களுக்கு ஒரு இன்ட்டரஸ்ட்டிங்கான போட்டியைப் பார்ப்பது போல ஆகிவிட்டது. செந்தட்டியிடம் உன்னைப் பற்றி நல்லபடியாக சொல்கிறேன் என்று ப்க்கத்து வீட்டு கைக் குழந்தை சொன்னால் கூட அதற்கு காசு கொடுத்துவிடும் பரவச மனநிலையில் புஷ்பாக்கா இருந்ததால் அவளது காதலை வைத்து வாழும் கூட்டம் ஒன்றும் உருவாகி சைடு வாக்கில் பில்லைப் போட்டு தின்று கொழுத்து வளர்ந்தபடி இருந்தது. மற்றொரு புறம் செந்தட்டியை பயமுறுத்த புஷ்பா வர்றாடா என்று சொன்னாலே அவன் விழுந்து அடித்துக் கொண்டு ஓடி விடுவான் என்பதும் நண்பர்களுக்கு விளையாட்டாக மாறிவிட்டது..

இப்படியான ஒரு நாளில்தான் புஷ்பாக்கா பொறுமையை இழந்தாள்.

செந்தட்டியை ஒரு சுபயோக சுப தினத்தில் பள்ளியின் ஆண்கள் பாத்ரூம் சந்தில் வழி மறித்தாள் புஷ்பாக்கா. தப்பியோட வழியில்லாமல் பொறியில் அகப்பட்ட புள்ளிமானைப் போல செந்தட்டி திகைத்து நிற்க புஷ்பாக்கா, 'பார்றா செந்தட்டி. நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன். நீ என்னாடான்னா என்னோட லவ்வை இப்ப வரைக்கும் ஏத்துக்கவே மாட்டேங்குற.. மரியாதையா சொல்லு என்னை லவ் பண்ணப் போறியா இல்லையா..?' என்று மிரட்டினாள்.

செந்தட்டியோ, 'இந்தா பாரு புஷ்பா. எனக்கு ரெண்டு வருஷத்துல எங்க அத்த மகள கட்டி வைக்கப் போறாங்ய. என்னால உன்னை லவ் பண்ண முடியாது. ஆளை விடு..' என்று அவனது முதல் காதல் வசனத்தைப் பேசினான்..

'இந்தா பார்றா. நான் உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். இனி நான் வாழ்ந்தாலும் செத்தாலும் உன் கூடதான். நாளைக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்குள்ள என்னை நீ லவ் பண்ணலன்னா முனித் தோப்பு கெணத்துல செத்து நான் பொணமாத்தான் மிதப்பேன். அது மட்டுமில்ல. என்னை நீ லவ் பண்ணி ஏமாததிட்டன்னு லெட்டர் எழுதி வச்சிட்டுதான் சாவேன். பாத்துக்க..' என்று மிரட்டிவிட்டு புஷ்பாக்கா போன போது அத்தனை நேரமும் அவள் பின்னால் நின்று (பாத்ரூம் போகும் வழியை அவள் மறித்து நின்றிருந்தாள்) மூத்திரம் முட்ட காத்திருந்த பையன்களே அதிர்ச்சியாகி விட்டார்கள்.

செந்தட்டி அழுதான், அரற்றினான், அய்யோவெனப் புலம்பினான். ஆனால் இதிலிருந்து வெளிவரும் வழி மட்டும் அவனுக்குத் தெரியமல் தவித்தான். சக நண்பர்களோ 'அந்தப் புள்ள சும்மா அப்புடித்தாண்டா சொல்லும. சூசைடு எல்லாம் பண்ணிக்கிறாது. நீ தைரியமா இருடா..' என்று தைரியம் சொன்னார்கள். ஆனாலும் செந்தட்டியால் தைரியமாக இருக்க முடியவில்லை..

அந்த 'நாளை' வந்தே விட்டது. செந்தட்டிக்கு அள்ளு இல்லை. அடிவயிற்றில் பெருங்கனல் ஒன்று பற்றியெறிந்து பய அமிலத்தைப் பொங்கவிட்டபடி இருந்தது. பையன் உண்ணாமல் உறங்காமல் பித்துப பிடித்தமாதிரி இருப்பதைப் பார்த்த அவனது அம்மா பேயோட்டிக்கு சொல்லிவிடலாமா என்று யோசித்தபடி இருந்தாள்.

விடிகாலை முன் மதியமானது. முன்மதியம் நண்பகலானது. நண்பகல் பின் மதியமானது. செந்தட்டிக்கு கை கால்கள் எல்லாம் நடுங்கத் துவங்கின.நண்பர்கள் அவ்வப்போது முனித்தோப்பு கிணத்தடிப் பக்கம் போய் வந்து போய்வந்து அவள் வரவில்லை என்று தகவல் சொல்லி அவனுடைய பீதியை இன்னும் அதிகப்படுத்தியபடி இருந்தார்கள்..

அழுதாலும் புலம்பினாலும் சாயந்திரம் அஞ்சு மணியை வரவிடாமல் யாரால் தடுக்க முடியும். அந்த அஞ்சு மணி வந்தே விட்டது. செந்தட்டி பயத்தோடு காத்திருக்க ஒருவன் ஓடி வந்தான்..

'எலேய் செந்தட்டி. புஷ்பா கெணத்துக்குள்ள குதிச்சிட்டாடா. முனித்தோப்பு வாசல் வழியா வருவான்னு வெய்ட் பண்ணுனோம். அவ எங்கிட்டே சைடு வழியா உள்ள வநதிருக்கா அவ கெணத்துக் கிட்ட போறதை தூரத்துல இருந்து பாத்து அவ கிட்ட ஓடுறதுக்குள்ள கிணத்துக்குள்ள குதிச்சிட்டா. கெணத்து மேட்டுல செருப்பை அவுத்து வச்சிட்டு ஒரு லெட்டரை எழுதி வச்சிருக்காடா..' என்றதும் செந்தட்டி விரக்தி மனநிலைக்குப் போய்விட்டான்..

உலகில் முதன் முதலாக காதல் வேண்டாம் என்ற கொள்கைக்காக அவள் விழுந்த கிணற்றிலேயே கல்லைக் கட்டிக் கொண்டு தானும் விழுந்து விடலாம் (எழவு அவனுக்கு நீச்சல் வேறு தெரியும்) கிணற்றை நோக்கி ஓடினான். கூடவே நண்பர்களும்.

இவர்கள் போவதற்குள் கிணற்றடியில் பெருங்கூட்டம் சேர்ந்து விட்டது. உள்ளே குதித்து நீச்சல் வீரர்கள் புஷ்பாக்காவை தேடியபடி இருந்தார்கள். உடனடியாக உள்ளே குதித்து உயிரை விட முடியாத துக்கமும் சேர்ந்து கொள்ள செந்தட்டி முதல் முறையாக அழத் துவங்கினான். நண்பர்கள் என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் திகைத்து அவனைப் பார்த்தபடி இருந்தார்கள்..

அது வரைக்கும் மறைந்திருந்த புஷ்பாக்கா செந்தட்டிஅழுவதை தாங்க முடியாமல் வெளியே வந்து அவனிடம் 'பாத்தியா.. நான் செத்துடடேன்னு தெரிஞ்சதும நீயே அழுவுற பாத்தியா.. இப்பவாவது என்னை லவ் பண்றேன்னு ஒத்துக்கோ' என்றது..

அனைவரும் திடுக்கிட்டு புஷ்பாக்காவைப் பார்த்தார்க்ள். செந்தட்டிக்கு வந்ததே ஒரு கோபம். அங்கே இருந்த பட்டைக் கம்பை எடுத்து அவளை விரட்டி விரட்டி அடிக்க ஆரம்பித்து விட்டான். அவள் அடி தாங்காமல் கதறியபடி ஓடிவிட்டாள்.

மறு நாள் இப்படி அடிப்பவனை எல்லாம் புருஷனாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிக்கையும் விடுத்து விட்டாள்.

இப்படியாக செந்தட்டி அந்த அக்காவின் மரணப் பிடியில் இருந்து வெளியே வந்தான்..

இது இப்படி இருக்க, சென்ற முறை ஊருக்குப் போன போது நான் படித்த ஊருக்கும் போகும்படி ஆனது. பஸ்ஸ்டாண்டில் ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் அருகில் புன்னகையோடு வந்தார். அட. நம்ம செந்தட்டி அண்ணன். அவனது பையனுக்கு எஞ்சினியரிங் கிடைத்துள்ளதாம. அவனைப் பார்க்க மதுரைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். இடது காது கொஞ்சம் அவுட்டாகி இருந்தது. வலது காதுப் பக்கம் பேசும்படி சொல்லி கொஞ்ச நேரம் பேசிவிட்டு பஸ் வந்ததும் புறப்பட்டுப் போனார்..

அதே நாளில் அந்த ஊரில் வேலை முடிந்து திரும்பும் வழியில் ஒரு பெட்டி கடையில் நின்று சிகரெட் புகைத்தபடி இருந்தேன். ஒரு பெரிய பெண்மணி தன் மகள் போல ஒருத்தி உடன் நடந்து வர, கையில் சின்னப் பொதி போன்ற மூட்டையில் பச்சைக் குழந்தையை சுமந்தபடி சென்றார். அவள்தான் புஷ்பாக்கா என்று நான் சொல்லவும் வேண்டுமா.. நான் ஏற்கெனவே சீரியலில் நடித்திருந்ததால் அவரது மகள் என்னை அடையாளம் கண்டு அவளது அம்மாவின் காதில் ஏதோ சொன்னது. புஷ்பாக்கா முகம் மலர வேக வேகமாக என்னிடம் வந்து 'நீதானய்யா கோலங்கள்ல அங்குச்சாமியா நடிச்ச..? நீ சின்னமனூருதான்னு சொல்லி இருக்காங்க. இப்ப எந்த சீரியல்ல நடிக்கிற..' என்று ஆர்வமாக பேச ஆரம்பித்து விட்டார். மகள் பிரசவத்துக்காக வந்திருக்கிறாளாம். சந்தோஷமாக அதே தடித்த குரலில் உரக்கப் பேசி சொன்னாள். நீ படித்த பள்ளியில்தான் நானும் படித்தேன் என்று சொல்ல எனக்குத் தோன்றவில்லை..

அவள் கையில் இருக்கும்அந்தக் குழந்தை அவளுக்கும் செந்தட்டிக்குமான பேத்தியாக இல்லாமல் போனதைப் பற்றி எனக்கு அப்போது சின்ன வருத்தம் மட்டும் தோன்றிது உண்மை..

அனைவருக்கும் எனது பிரியங்கள்..

9 comments:

  1. ISO கிரேட் கதை சொல்லி நீங்கள்...
    நல்ல பதிவு நந்தன்

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. மிகச்சிறந்த கதைசொல்லிதான் நீங்கள். :)

    ReplyDelete
  3. // நீ படித்த பள்ளியில்தான் நானும் படித்தேன் என்று சொல்ல எனக்குத் தோன்றவில்லை..

    ஏன், அப்படி எதுவும் பின் விளைவுகள் வரும் என்ற பயமா ?

    கடைசி எழுத்து வரைக்கும் படிக்க வைக்கிற எழுத்து நடை அருமை சார்..

    ReplyDelete
    Replies
    1. ஆக்சுவலா எழுத நினைச்ச முடிவுல இருந்து கொஞ்சம் நழுவிட்டேன்.. அதனால வந்தது அது.. Anyway ரொம்ப நன்றி அருள்..

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நல்லாயிருக்குண்ணா...ரெம்ப கேர்ஃபுல், எவனாச்சும் சுட்ற போறான்...படிக்கிறப்போ நீங்க பேசுற மாதரியே இருக்கு...அப்புறம் இன்னொரு மேட்டர்ண்ணா...யேன் அங்கங்க கேரக்டரை இன்ட்ரோ கொடுக்குரீங்க?...சீரியல் மாதிரி...முதலயே எல்லா கேரக்ட்டரையும் இன்ட்ரோ பண்ணிட்டீங்கனா இன்னும் கதைல இன்வால்வாகலாம்ன்னு தோனுதுண்ணா....

    ReplyDelete
    Replies
    1. சீரியல்ல வேலை பாத்தா இப்புடி எழுதுற முறைல மாற்றம் வந்துதாண்டா ஆகும் தம்பி பிரகா.. இதை மாத்ததான் ரொம்ப முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்..

      Delete