Sunday, 23 March 2014

ஆடும் ஊஞ்சலில்
ஒரு வயது போகிறது
ஒரு துக்கம் வருகிறது
குழிந்து ஏந்திய கைகளில் பெய்யாமல்
மழை
எல்லா இடத்திலும் பெய்கிறது
விரித்த கைகளுடன்
கனவில் பறக்கும் குழந்தை
விழித்தபின் அழக்கூடும்
இல்லாத பொற்காசுகளை
இல்லாத பைகளில் இருந்து
இல்லாத பிச்சைக்காரனுக்கு
அள்ளியள்ளி வழங்கிப் போகிறான்
மனம் பிறழ்ந்த பிச்சைக் காரன்
இருக்கிறதென்றோ இல்லையென்றோ
உறுதியாகச் சொல்ல முடியாது
அன்பை
எப்போதும் என் துழாவும் கரங்களுக்கு
சிக்கியே விடுகிறது ஒரு செடியோ மரமோ
பள்ளத்தில் வீழும் முன்பு
இந்த இக்கரையிலிருந்து
பள்ளத்தில் வீழாமல்
தினந்தோறும் பயந்தபடி இருக்கிறேன்
ஆயிரம் கரங்கள்
என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும்போதும்

No comments:

Post a Comment