Sunday, 23 March 2014

நேற்று முதல்நாள்
வீடு திரும்பும் இரவில்
மிதமிஞ்சிய போதையால்
நிலைபிறழ்ந்த நண்பனை
எழுப்பவோ அல்லது
எழும்பாமல் படுக்கவைக்கவோ
போராடிய நண்பனைப் பார்த்தேன்.
கெட்ட வார்த்தைகளால்
அந்த போதை நண்பன்
உதவும் நண்பனை
செதுக்கி எடுத்ததைக்
கேட்டபடிதான் கடந்து போனேன்..
நேற்று காலையில்
பேப்பர் வாங்கப் போகையில்
அந்த குடிகார நண்பன் எழுந்து
அரக்கப் பரக்க
தன் சட்டைப் பை
பணத்தை தேடியபடி இருந்தான்.
எதுக்கு அவ்வளவு குடிக்கணும்
எதுக்கு இப்ப தவிக்கணும்
என்று நான் கேட்டபோது
ரொம்ப குடிக்கல சார்
யாவகம் எல்லாம்
நல்லாத்தான் இருந்திச்சு.
எவனோ ஒரு பரதேசி
ஃபிரண்டுன்ற மாதிரி
என்னை கொள்ளையடிச்சான்
அத்தனை போதையில
அதை தடுக்கமுடியாம
அவனை திட்டிக்கிட்டே இருந்தேன்
என்றான் அவன்..
களவும் கருணையும்
ஒருவடிவம் கொண்டது
எதற்காக என திகைத்து
அடுத்த சொல் பேசாது
வீடு திரும்பினேன்
நான் என்ற அயோக்கியன்..

1 comment:

  1. என்னமோ ஆட்டைய போட்டது நீர் என்கிறமாதிரி சொல்றீங்க...

    குடித்தால் அளவு மீறினால் இதுமாதிரி நடப்பது சகஜமே...
    ஒருமுறை சாரலுக்கு ஒதுங்கிய ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஒருவரை கைத்தாங்கலாக கொண்டுவந்தார்கள், பாசம் வழிய அவரிடம் பேசியவர்கள் மோதிரத்தை கழட்டியபொழுது குடிமகன் ழேன் மோதிரத்தை தொடுற என்றபோது பதறி என்ங்களைப் பார்த்தனர் பின்னர் கைத்தாங்கலாக அவரை அழைத்து சென்றனர் (யாரும் பார்க்காத இடத்திற்கு) அப்போ நான் அயோக்கியன் உங்கள் கருத்து இதுவா?

    ReplyDelete