Sunday 23 March 2014

இப்படியாகக் கழிகின்றன
என்
எல்லாப் பொழுதுகளும்..
வைத்துவிட்டுப் போன புன்னகைகள்
திரும்பி வரும்முன்னே
நசுங்கிக் கிடக்கின்றன..
வந்து பார்க்கையில்
செடிரோஜாப் பூக்கள்
பாதிதான் இருக்கின்றன.
பொக்கிஷமான கண்ணீர்த்துளியை
யாரேனும்
சாக்கடையில் வீசிவிட்டுப்
போயிருக்கிறார்கள்.
தேடிச் சேர்த்த
கூழாங்கற்களை
கட்டிடம் கட்டப்
பயன்படுத்தி விட்டார்கள்.
என்ன மயிரு புன்னகை
இன்னொருக்க சிரிச்சிட்டாப் போச்சு
என்ன மயிரு ரோசாப்பூ
நாளைக்கு பூக்காமலா போகும்
என்ன மயிரு கல்லு
அதென்ன வைரமா
என்று சொல்லும் உங்களிடம்
என்ன பதில் சொல்ல
அந்தப் புன்னகை
இறந்தவனின் கடைசிப் புன்னகையென்றும்
அந்த ரோஜா
அச்செடி எனக்காகப் பூத்ததென்றும்
அந்த கூழாங்கற்களை
இறக்குமுன் அந்நதி
எனக்குத் தந்ததென்றும்
எப்படி விளக்க முடியும் உங்களிடம்
உங்கள் கேள்விகள் எளிமையானவை
என் பதில்களால் உங்களைக் கொல்ல
நான் விரும்பவில்லை.

1 comment:

  1. இங்கே தான் நந்தன் நிற்கிறார்
    உங்களின் சிறந்த கவிதைகளில் இது ஒன்றாக் இருக்கக் கூடும்
    அடுத்த சிறந்ததைப் படிக்கும் வரையிலாவது ...

    ReplyDelete