Friday 7 February 2014

ஒரு நட்சத்திரம்
ஒரு வெளி
இரண்டுக்குமிடையில்
ஒப்பந்தங்களேதுமில்லை..

ஒரு பூ
ஒரு பூக்காரர்
இருவருக்குமிடையில்
பணம் தவிர
வேறெந்த பந்தமும் இல்லை..

ஓரச் சாலையில்
வெட்டப்பட்ட குழி
அதில் விழப்போகிறவர்
இவர்களுக்கிடையேயும்
எந்த தொடர்பும் இல்லை..

ஒரு முத்தம்
பதில் முத்தம்
இரண்டுக்குமிடையில் 
கட்டாயம் தொடர்பிருக்கிறது -
இரண்டும் வெவ்வேறல்ல..

ஓர் அழுகை
பெரும்பசிப் பொழுதில்
இடப்பட்ட சோறு
இரண்டுக்குமிடையில்
கட்டாயம் தொடர்பிருக்கிறது
இரண்டும் வெவ்வேறென்றாலும்..

நிபந்தனைகளின்றி
பகுதி பகுதியாகவோ
முழுமையாகவோ
என்னை உனக்குத் தருகிறேன்..

சோர்ந்த கைகளுடன்
நீந்திக் கரையேற முயன்ற
கைவிடப்பட்ட பொழுதுகளை
உனக்கு உண்ண அளிக்கிறேன்..

தா, தராதே என்று
நான் ஏதும் சொல்லவில்லை..

ஒன்றே ஒன்று மட்டும் செய்..

எப் போதெல்லாம்
ஒரு கண்ணீர்த்துளியை
சந்திக்கிறாயோ
அப்போதெல்லாம்
முடிந்தால்
ஒரு 
கண்ணீர்த்துளியை மட்டும்
பதிலுக்குத்
தா..

Thursday 6 February 2014

ப்ரியமுள்ள ஜிஜ்ஜுக்குட்டி..

மிக்க தயக்கத்தோடுதான்
இப்படி அழைக்கிறேன்..

எப்படி இருக்கிறாய்..?
பேசத் துவங்கிவிட்டாயா..?
நாங்கள் ஆசைப்பட்டபடி
கிள்ளி முத்தா
கடிச்சு முத்தா
கொஞ்சி முத்தா
எல்லாம் பழகியிருக்கிறாயா..?

அந்த குட்டி முகத்தில்
கோபத்தையும், நைச்சியத்தையும்
எழுதப் பழகிவிட்டாயா..?

இன்றைக்கு இருந்தால்
உனக்கு 
நான்கு வயது என்பதை
நீ உணர்ந்திருக்கிறாயா..?

ஸ்கேன் செய்த மறுநாளில்
உன்
பாலென்ன என்பதை
சொல்லவா என்று கேட்ட
தம்பியின் கேள்விக்கு 
நாங்கள் சரியென்றே சொல்லி இருக்கலாம்..

அல்லது
ரத்தமாய் நீ
பிரிந்து சென்ற அந்நாளில்
உனக்கு என்ன பெயரிடுவது
என்பதற்காகவாவது
மருத்துவரிடம் கேட்டிருக்கலாம் -
நீ ஆணா பெண்ணாவென்று..

எதுவுமின்றி
ஜிஜ்ஜு என்ற பெயருடன்
இருககிறேன் நான்..

இந்த பெயருக்காக நீ
கோபித்துக் கொள்ள வேண்டியதில்லை தங்கம்..

நீ எந்த பாலென்றாலும்
உன்னை அழைக்க 
நாங்கள் வைத்திருந்த பெயர்தான் இது..

இப்போது 
பார்க்கும் குழந்தைகளுக்கெல்லாம்
பகிர்ந்து தருவதை
உனக்கே தந்திருப்போம்...
பெயரிலா வாழப் போகிறது அன்பு..

(இதை ஒருநாளும்
எழுத முடியாத
ஒருத்தியின்
கனவிலிருந்து திருடியது..)
காலையிலிருந்து
அழைப்பே வராத
அலைபேசி வைத்திருப்பவனின்
அலைபேசியில்
548 எண்கள் இருக்கின்றன..

ஒரு வீட்டுமனை
வாங்கச் சொல்லுமொருத்தி..
உணவுக்கு காசில்லை எனினும்
உடலை சீர்செய்ய அழைக்குமொருத்தி..
மிகுதியாய் இருக்கும் பணத்தை
முதலிடச் சொல்லி 
கொஞ்சுமொருத்தி..
இவர்கள் யாவருக்கும்
அவனது எண் தெரியாமல்
போனதுதான் அவனது துக்கம்..

நடக்கையில் எதிர்ப்படும்
வேண்டாத நண்பரைத் தவிர்க்க
பொய்யான அழைப்பை
புனைந்து பேசியபடி
அந்த நண்பரிடம்
அப்புறம் பேசுகிறேன் என
ஜாடை செய்துவிட்டு
கடந்து பல நிமிடம் ஆனபின்னும்
கற்பனை அழைப்போடு
பேசியபடியேதான் இருக்கிறான் அவன்..

உணவு தராதவர்கள்
வேலை தராதவர்கள்
வேலை பார்த்தும்
கூலி தராதவர்கள்
இவர்களனைவரையும் விட
அவனை அழைக்காதவர்கள் மீது
கடுங்கோபம் வருகிறது அவனுக்கு..

என்றாவது ஒரு நாள்
யாராவதொருவர்
அழைத்துவிடுவார்களென்றே
இதுவரை அழிக்காமலிருக்கிறான்
அந்த எண்களை..

ஒரு முத்தமில்லை..
ஒரு கைகுலுக்கலில்லை..
அன்போடு பார்க்கும்
ஒரு பார்வை கூட இல்லை..
இவனே என அழைக்கும்
பெயரழைப்பும் இல்லை..

இவையனைத்தையும் விட
அலைபேசியில் அழைக்க
யாருககும் மனமில்லை..

ஊமையாகிப் போன
அலைபேசியில்
அழைப்பொலியாக
அம்மாவென்றழைக்காத
பாடலை வைத்திருக்குமவன்
தினந்தோறும் பெரு நம்பிக்கையுடன்
தன் அலைபேசியை
பார்த்தபடியிருக்கிறான்
ஏதாவதொரு அழைப்புக்காக..

விடிந்தும் இருண்டும் கடக்கும்
இந்த
ஏதாவதொரு நாளின் ஒரு ◌பொழுதில்
யாரேனும்
நிச்சயமாக யாரேனும்
தவறுதலாகவேனும் அழைத்துவிடக் கூடும்
என்பதால்தான்
உடைக்காமல்
எரிக்காமல்
நொறுக்காமல்
வைத்திருக்கிறான்
தன்
அலைபேசியை..

உலர்ந்த இதழ் நீட்டி
முத்தத்துககாக
காத்திருக்கிறதொரு
சூழல் அறியா
அலைபேசி..
இகம், பரம்
ஆதி மனித அறியாமை
புன்னகை, கண்ணீர்
முத்தம், அணைப்பு
ஆறுதல், துரோகம்
வரம், சாபம்
வருடல், நீதி
இந்த கன்னம் உன்னுடையது
இந்த உயிரும் உன்னுடையது
வசனம், வாழ்வு
அர்ப்பணிப்பு, அன்பு
அள்ளிக் கொடுத்தல்
அணைப்புக்கு அமைதியாயிருத்தல்
அனுமதியோடு அழுதல்
எப்போதும் சிரித்தல்
இப்படியான செயற்கை வாழ்வு
எல்லாமே
அவளது கனவுகளை நசுக்கிய
ரோடு ரோலரின்
மறுபெயர்கள் என்கிறாள்..

நீங்கள் காதல் என்கிறீர்கள்..
நாம் நினைத்த வாசமுள்ள
ரோஜாப் பூக்களோ
தாமரைப் பூக்களோ
அல்லது
நம் செவ்வந்திப் பூக்களோ
நம் தலையில் உதிர்வதில்லை..

நமக்கு வாய்த்ததெல்லாம்
எறும்புகள் ஊறும்,
தேனும் கசக்கும்
வேப்பம் பூக்கள்தான்..

யாரேனும்
யாரேனும்
வேப்பம்பூக்களுக்கும்
வாசனையைச் சேர்ப்பீர்களாக..
வாரி அணைத்துக் கொள்கிறாள்
பேச்சின்றி.

தேம்பி வரும் மகனை..

பிணியுற்றால் சாபமிடுகிறாள்
தெய்வங்களை..

கேட்டுப் பெற்றாலும்
தானாக வந்தாலும்
இருகரம் ஏந்தி
பெற்றுக் கொள்கிறாள்
முத்தங்களை..

யௌவனத்தின் கோட்டைத்
தாண்டிப் போனவனை
மனமின்றிதான் கையசைத்து
வழியனுப்புகிறாள்..

ஆயினும்
நினைவுப் படுதாவில்
ஆடும் 
சிறுவனை, குழந்தையை
சதா நேரமும் 
கொஞ்சியபடிதான் இருக்கிறாள்..

இதோ இன்று
காதல் மனைவியுடன்
காலில் விழும் அவனை
அள்ளியெடுத்து 
முத்தமிடக் கூசி
திருநீறிட்ட விரலால்
உதடுகளை பதில் செய்கிறாள்..

என்றென்றும்
பேரனையோ, பேத்தியையோ
பிள்ளையெனவே முத்திடுவாள்
அந்த தாய்..

தடுத்து வைத்திருக்கும்
திரையின் மறைவில்
அதற்கும் அதற்கும் அப்பால்
பெருக்கெடுத்தோடும் 
பிரியமென்னும் நதியை
கண்டவர் பாக்கியவான்
காணாதவர்
என்போல
கவிதையெழுதி
சாகக் கடவதாக..